Wednesday, December 25, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 47


வாழ்திறன் அவசியம்

இன்றைய  மாறி வரும் உலகத்தில் சில பல வாழ்திறன் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் பிழைத்து முன்னேறலாம் என்று ஆகி வருகிறது. சரி தானே? வாழ்திறன் என்றால் இன்றைய மாறிவருகிற டிஜிட்டல் யுகப்புரட்சியில் பல்வேறு புதிய விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே வாழ்வின் புதிய சவால்களை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

புறவெளியில் காண்கிற பிறவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் கூட்டம் ஒரு புறம், மால் எனும் பல்வகை நாகரீக மாளிகைகளில் சுற்றித் திரியும் கூட்டம் மறு புறம் என்று இன்று இந்தியா இரண்டாகப் பிரிந்து பிளந்து கிடக்கிறது. தனது பெயரைக் கூட எழுதத் தெரியாத சிலர் மற்றும் அடுத்தவர் கையெழுத்தைப் போட்டு அல்லது பாஸ்வோர்ட் பயன்படுத்தி அக்கௌன்ட் ஹாக் செய்யும் சிலர் என்று மேலும் இரண்டாகப் பிரிந்து இருக்கிறது இளைய தலைமுறை

இதற்கு நடுவில் ஒரு சில திறன்கள் இருத்தல் அவசியம் என்று உலகம் அறிவிக்கிறது. அந்தப் பட்டியலை அறிய நிச்சயம் ஆவல் இருக்குமே..! 

தானே டை கட்டிக் கொள்வது, லேஸ் இருக்கும் காலணி அணிந்து கொள்வது, புத்தகம் படிக்க, இணையத்தில் நம்பகமான விஷயத்தை தேடி எடுக்க, ஒரு புத்தகத்தை படித்து விமர்சனம் செய்ய, ஒரு கதையோ நகைச்சுவையோ அழகாக நயமாக சொல்லத் தெரிதல், நினைவு கூர்ந்து ஒரு கவிதையை பழமொழியை சொல்லுதல், கிழிந்த துணியை மற்றும் சட்டை பட்டன் தைக்க, தோய்த்த துணியை இஸ்திரி செய்ய உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

நண்பர்கள் வந்தால் தேனீர் போட்டுத் தர, புதிய டிவி சானெலை தேடி ரிமோட் மூலம் வைக்க, ரூம் ஏசியை குறைக்க கூட்ட, வீட்டில் பியூஸ் போனால் அந்த ஒயரை மாட்ட, பல்பை மாற்ற, இரண்டு சக்கர வண்டியில் பஞ்சர் ஆனால் வீல் மாற்றிட, நல்லதொரு போட்டோ எடுக்க, குழந்தையை தூங்க வைக்க, ஆபத்தில் இருக்கும் வயதானவருக்கு மருந்து கொடுத்து உதவ, திடீர் என்று ஒரு தலைப்பில் எழுத மற்றும் பேச, சொந்தமாக ஒரு பவர் பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் செய்ய, ஆபத்து என்றால் நதியில் கிணற்றில் நீந்த, ஓடும் வண்டியில் ஏற இறங்க, தெரியாத மொழியில் ஓரிரு வார்த்தையாவது பேச என்று இந்த பட்டியல் நீளுகிறது

ஆளில்லாத நள்ளிரவில் தனியாக நடக்க, ரகசியம் காக்க, பிரார்த்தனை செய்ய, யோகா மற்றும் தியானம் செய்ய, புதிய மனிதருக்கு கை குலுக்க, ஒபெனர் இல்லாமல் ஒரு பாட்டில் திறக்க, சாவி தொலைந்தால் பூட்டைத் திறக்க, போலீஸ் பிடித்தால் சமாளித்துப் பேசித் தப்பிக்க, வங்கியில் பணம் போட எடுக்க, இணையம் மூலம் பணம் அனுப்ப அல்லது பெற, இணையத்தில் உணவு அல்லது ஒரு பொருள் வாங்க, இணையம் மூலம் சினிமா அல்லது பயணச் சீட்டு பெற, குழந்தைகளுடன் விளையாட பேச, அழும் ஒருவரை அல்லது குழந்தையை சமாதானப்படுத்த, அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம் அல்லது ஆணிடம் பேச, சொத்து வாங்கும் முடிவெடுக்க, பயன்படுத்திய பொருளை விற்க, நாய் போன்ற விலங்குகளை சமாளிக்க இது நீடிக்கப்பட்ட பட்டியல் எனலாம்

மற்றவர் மனம் புண்படாதவாறு ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்ய, நமது கருத்தை எடுத்துச் சொல்லி அடுத்தவரை ஒத்துக்கொள்ளச் செய்தல், சுவாரசியமான கடிதம் எழுத, சிறு கவிதை எழுத, நல்லதொரு சம்பவத்தில் சிறு நடனம் ஆட அல்லது நாலு வரி பாட, தீ விபத்தில் காப்பாற்ற, புதிய மொபைல் வாங்கினால் பழைய தொலைபேசியில் உள்ள எண்களைப் பதிவு செய்ய, திடீர் என்று பேச அழைத்தால் நல்லபடி பேசி கைத்தட்டல்கள் பெற, நல்லதொரு தன்விவரக் குறிப்பு தயார் செய்ய, கோபமாக இருப்பவர்களை சமாளிக்க, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது கற்றுக் கொள்ள....வாழ்ந்து சாதிக்க. இவற்றுள் உங்களுக்கு எவ்வளவு தெரியும் ? எவ்வளவு தெரியாது? எப்போது தெரிந்து கொள்ளலாம்?

முக்கியமாக இவை கற்றே தீர வேண்டும் இன்றைய நிலையில் சமாளித்து வெற்றி பெற: தாமதம் செய்யாமல் ஒரு தீர்மானம் அல்லது முடிவு எடுக்க, படைப்பாற்றலுடன் சிந்திக்க, மற்றவர்களை கருணையோடு பார்த்தல், பிறருடன் இணைந்து செயலாற்ற, தாழ்மையுடன் இருக்க, வெற்றியை சமாளிக்க, கவனமாக பிறர் பேசும் பொழுது கேட்க, கனிவுடன் பரிவுடன் நடக்க பிறரை நடத்த, தோல்விகளை எதிர்கொள்ள, பிறர் பற்றி சரியான முடிவு எடுக்க - என்று பல வல்லுநர்கள் சொல்கிறார்கள். இவை பற்றி என்றேனும் சிந்தித்தது உண்டா? இல்லை என்றால் உடனே யோசியுங்கள் எங்கே தொடங்குவது, எதை கற்கலாம் என்று...!!

கற்பது என்று முடிவு செய்தாகி விட்ட நிலையில் தாமதம் வேண்டாம். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனலாம். ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் என்றால் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் முதலீடு செய்து நாம் புதியதொரு விஷயத்தைக் கற்கலாம் என்றால் நாம் செலவிடும் நேரம் மொத்த நேரத்தில் 1% மட்டுமே. (1440 - 15 என்றால் 1 % தானே) ஏன் நம்மால் ஓராண்டில் புதிதாக 365 விஷயங்களைக் கற்று விட முடியாத? அவ்வளவு வேண்டாம். ஒரு மாதத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் ஓராண்டில் 12 விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம். திறன் வளர்ப்போம். புதுவாழ்வு சமைப்போம்.


No comments:

Post a Comment