Monday, December 23, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 45

:

ஏனென்ற கேள்வி இல்லாத வாழ்வா?
ஏன்? இந்தக் கேள்வி பல விடைகளைக் கொடுக்க வல்லது. பல பூட்டுக்களைத் திறக்கவல்லது. 
ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? அதற்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்? ஏன் இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்? ஏன் நான் இவ்வளவு கற்க வேண்டும்? புதியவற்றை அறிய வேண்டும்? ஏன் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும்? ஏன் அவற்றை எல்லாம் நான் பார்க்க வேண்டும் என் வாழ்வில்? ஏன் நான் பல பொருட்களை வாங்கிட வேண்டும்?
ஏன் அறிவை விருத்தி செய்ய வேண்டும்? ஏன் நான் புதிய புதிய பொறுப்புகக்ளை நிறைய பொறுப்புக்களை ஏற்க வேண்டும்? ஏன் நான் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏன் பிறர் போல நானும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும்? ஏன் எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்? ஏன் நான் பெற்றோரை மற்றோரை திருப்திப்படுத்த வேண்டும்? 
புதிய திறன்களை பெருக்குதல், புதிய வளங்களை உருவாக்குதல், சொத்து சேர்த்தல், எல்லோருடனும் போட்டி போடுதல், எனது அறிவை பகிர்தல், பணத்தை பகிர்தல், குழந்தைகளைக் காத்தல், மனைவியைத் திருப்திப்படுத்தல் இப்படி ஏன்  இவ்வளவு விஷயங்களை செய்ய வேண்டும் ? யாருக்காக? (யாருக்காக இது யாருக்காக ....இந்த மாளிகை வசந்த மாளிகை பாடல் நினைவுக்கு வருகிறதா?)
ஏன் காண்பவற்றை எல்லாம் பெற வேண்டும்? நினைத்ததை எல்லாம் செய்ய வேண்டும்? எல்லாமாக  ஏன் மாற வேண்டும்? 
இந்த 'ஏன்' எனும் கேள்வி ஆகச் சிறந்த கேள்வி எனலாம்.  ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. 
இதோ இன்னொரு கேள்வி : 'ஏன் இருக்கக் கூடாது ?' 'ஒய் நாட்' என்பார்கள் ஆங்கிலத்தில். 
ஏன் நிறைய சம்பாதிக்கக் கூடாது? ஏன்  நிறைய படிக்கக் கூடாது? ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? ஏன்  முன்னேறக் கூடாது? ஏன் புதிய விஷயங்களை கற்கக் கூடாது? புதிய விஷயங்களை கண்டுபிடிக்கக் கூடாது?  புதிய மனிதனாக  ஏன் மாறக்கூடாது..ஏன்? ஏன் ஒரு செல்வாக்கை பெறக்கூடாது? ஏன்  பிறருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது? ஏன்  சிரமங்களில் இருக்கும் பல்லாயிரம் மக்களை மீட்கக் கூடாது? ஏன்  பிறருக்கு உதவும் மனிதராக, பிறருக்கு அறிவு மற்றும் ஞானம் தருபவராக மாறக்கூடாது?
ஏன்  நல்லதொரு எழுத்தாளனாக, கவிஞனாக, ஓவியனாக, இசைக் கலைஞராக, விஞ்ஞானியாக, விளையாட்டு வீரனாக, புதிய தலைவனாக ஆகக் கூடாது? எனவே ஏன் இருக்கக் கூடாது எனும் கேள்வி மிகவும் தூண்டும் ஒன்று தான். வல்லமையைத் தரக்கூடியது தான். வலிமை மிக்கது தான்.
அடுத்த ஒன்று 'ஏன் அது நானாக இருக்கக் கூடாது? என்பது. பிறர் வெற்றி பெறட்டும். செல்வந்தர் ஆகட்டும். உதவும் வள்ளல் ஆகட்டும். நீங்கள் ஆகக் கூடாது என்று யார் சொன்னது?  உங்களுக்கு அந்த அறிவு இருக்கிறது, திறன் இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, நல்ல சூழல் இருக்கிறது, அதற்கான நேரம் இருக்கிறது, அதற்கான வசதி இருக்கிறது, அதற்கான ஊக்கம் இருக்கிறது, அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் திட்டமிடுவதும், இலக்கு நிர்ணயிப்பதும், வெற்றி பெறுவதும், யார் கையில் உள்ளது. யார் உங்கள் சிறகுகளை பறக்க முடியாமல் பிடித்துக் கொண்டு தடுப்பது? உற்று நோக்கினால் வேறு யாருமே அல்ல. அது நாம் தான். நமது மனநிலை தான். நமது இயலாது என்ற எண்ணம் தான். நம்மை முடக்கும் அவநம்பிக்கைகள் தான். சுய சந்தேகங்கள் தான். இதில் என்ன உங்களுக்கு மாற்றுக் கருத்து?
இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் வெகு சீக்கிரம், சில நாட்களில் வேகமாக முன்னேறலாம். பிறரை முன்னேற்றலாம்.உங்கள் கனவுகளை நனவாக்கலாம். உங்கள் குடும்பத்தை சமூகத்தை பெருமைப்படுத்தலாம். நீங்கள் ஆரோக்கியமானவர்களாக, சக்தி வாய்ந்தவர்களாக, செல்வந்தர்களாக, அறிவாளிகளாக, தலைவர்களாக ஆகலாம். ஏன் நீங்கள் ஆகக் கூடாது? இங்கே கேட்கப்படுவதும் 'ஏன்' தான்? இது முழுக்க முழுக்க நம்மைப் பற்றியது என்பது அறிவோம்.
சரி, இன்னொரு கேள்வி உண்டு என்னிடம். இவ்வளவு கேள்வி கேட்டோம் நம்மை நாமே? "ஒய் நாட் நவ்" ? ஏன் அதனை இப்போதே தொடங்கக்கூடாது? அதற்கென்று நேரம் இருக்கிறதா? கனவை இலட்சியத்தை கையில் எடுங்கள். அவற்றை நிறைவேற்றுங்கள். அதன் பலனைப் பாருங்கள். பெறுங்கள். ஆனந்தத்தை அனுபவியுங்கள். மற்றவருக்கும் அளியுங்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த அக்னிக்குஞ்சை ஒரு பிழம்பாக மாற்றுங்கள். வயிற்றுக்குள் எரியும் அந்த வேட்கை நெருப்பு உலகோர் வாழ்க்கையில் ஒளியாகட்டும். ஏன் அப்படி நடக்கக் கூடாது?
ஒரு முக்கிய விஷயத்தை விளக்கும் ஒரு கதை.  ஒரு காகம் நினைத்தது நான் ஒரு அன்னப்பறவை போல ஏன் வெளுப்பாக இருந்திருக்கக் கூடாது? அந்த அன்னம் நினைத்தது ஒரு பஞ்ச வர்ணக்கிளியைப் பார்த்து நான் ஏன் இப்படி வெள்ளையாக இருக்கிறேன் என்று. பஞ்ச வர்ணக்கிளி நினைத்தது நான் ஒரு மயில் போல அழகாக தோகை விரித்து ஆடக் கூடாது என்று? அந்த மயில் நினைத்தது நான் ஏன் இந்த காகம் போல நினைத்த இடத்திற்கு பறக்க முடியவில்லை. அவைகளைப் போல கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்று. இந்த பழைய கதை ஒன்றும் உங்களுக்கு புதிது அல்ல.


இல்லாத ஒன்றை நினைத்துத் தானே இந்த உலகில் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஓலமிடுகிறோம்? நம்முள் இருப்பதை பிறர் தானே பார்க்கின்றனர்? நாம் ஏன் அதனைப்  பார்க்கவில்லை? நம்முள் ஆயிரம் இருக்கும் போது வேறு ஒருவரிடம் இருக்கும் நம்மிடம் இல்லாத மற்றொன்றை நினைத்து நாளைக் கழித்து நமக்குக் கிடைத்தமைக்கு நன்றி சொல்லாது வருத்தத்துடன் வாழ்கிறோம். ஏன் ? இது தான் இந்த கட்டுரையில் நான் கேட்கும் கடைசி 'ஏன்'..!! இந்த கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக மாற்றப்போவது நிச்சயமாக நீங்கள் தான். 

No comments:

Post a Comment