Sunday, December 22, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 44



கொண்டாட்டமா திண்டாட்டமா ?
பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் தைத்திருநாள் என்று எல்லோரும் மகிழ்வோடு எதிர்நோக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்று பண்டிகைகளும்  கொண்டாட்டங்களும் பெரிய அளவிலான உலகளாவிய பொருளாதார தூண்டுதல்களாக மாறி வருகின்றன. 
சுமார் மூன்று டிரில்லியன் பணம் உலகளவில் செலவாகும் இந்த பத்து பதினைந்து நாட்களில் என்று சொல்லுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். பெரும்பாலும் ஐரோப்பா, லண்டன், அமேரிக்கா, ஜெர்மனி  போன்ற பல நாடுகளில் ஏறத்தாழ பத்து நாட்களுக்கு யாருமே வேலைக்கு செல்ல மாட்டார்கள். தமது இல்லம் விட்டு பல புதிய இடங்களுக்கு பயணம் செய்வார்கள். சிலர் இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்றிட நினைப்பார்கள். 
நமது நாட்டு இளைஞர்களும் அயல்நாட்டு நிறுவனங்களில் பணி புரிவதால் அவர்களும் இங்கே கட்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளாக திரிவார்கள் இக்காலங்களில். சேர்த்த பணத்தை எடுத்து விட்டு சந்தோஷ தருணங்களை வாங்கிட எண்ணும் காலமாக இருக்கிறது இந்த சமயம்.
உலகம் முழுவதும் தமது இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் நடுவதற்கு காட்டில் இருக்கும் கோடிக்கணக்கான சவுக்கு (பைன் ) மரங்களை வெட்டிச் சாய்ப்பார்கள். ஒரு வார காலத்திற்குப் பிறகு அவையெல்லாம் தூக்கி வீசப்படும் பயன் இழந்து. சுமார் 60 மில்லியன் மரங்கள் ஐரோப்பா நாட்டில் மட்டும் என்று சொல்லப்படுகிறது. 
தவிர, கோழிகள், ஆடுகள், மாடுகள், மீன்கள் என்று அப்பாவி விலங்குகள் தமது உயிரை இழக்கும் மனிதர்கள் உண்டு அனுபவிக்க. சுமார் 10 மில்லியன் வான்கோழிகள் தமது உயிரை வானுக்கு அனுப்பி அடுப்பில் வேகும் ஐரோப்பாவில் மட்டும். என்கிறார் ஒரு நிபுணர். 
நுகர்தல், வீணடித்தல், கொண்டாட்ட படுகொலை, போதை, சூதாட்டம் என்று இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டு புது வருடக் கொண்டாட்டங்கள் உலகளவில் கழிகின்றன. புத்தாண்டு மீண்டும் பிறக்கிறது. 
எல்லோருமே பிரார்த்தனை செய்கிறார்கள் இந்த ஆண்டும் நல்லபடி வணிகம் பெருகி செல்வம் கொழிக்க வேண்டும் என்று. குழந்தைகள் பிரார்த்தனை செய்கிறார்கள் நிறைய பரிசுகள் அவர்களுக்கு வந்து சேர வேண்டும் என்று (சொந்த துப்பாக்கிகளும் இதில் அடங்கும்). சாண்டா வேஷமிட்டு முதியவர்கள் பலர் ஆங்காங்கே சென்று குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்விக்கிறார்கள். ஆனால் யாரும் நன்றி சொல்லவில்லை என்பது வேறு விஷயம். 
இம்முறை நமது கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி கூட சாண்டா வேடமிட்டு ஆதரவற்ற இல்லம் ஒன்றிற்கு சென்று அங்கே இருக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பரிசளித்து மகிழ்வித்து இருப்பதாக பத்திரிகை செய்தி சொன்ன பொழுது மனதில் தோன்றியது பண்டிகைகள் இப்படித்தானே கொண்டாடப்பட வேண்டும் என்று. 
இதெல்லாமே 'நான்' 'எனக்கு' எனும் கலாச்சாரத்தின் உச்சம். எனக்கு இது வேண்டும், அது வேண்டும். அவற்றை எப்படிப் பெறலாம் என்பதே. இதுவா பண்டிகைக்கால கொண்டாட்டங்கள்? சுற்றி இருக்கும் மக்களை விரும்புவது, அவர்களுக்கு உதவுவது, இயன்றதைத் தருவது, சலுகைகள் மற்றும் வசதிகள் குறைந்த மக்களை மகிழ்விப்பது இவை தானே கொண்டாட்டமாக இருக்க முடியும்? 
ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கொண்டாட்டத்தைப் பற்றி இங்கே சொல்லவில்லை. இப்போதெல்லாம் எல்லோரும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டாவது நான் குடிக்க மாட்டேன், மிருகவதை செய்ய மாட்டேன், மரங்களை வெட்ட மாட்டேன், வெறுமனே புத்தாண்டு சத்தியங்கள் மற்றும் உறுதிமொழிகள் தர மாட்டேன் என்று மக்களால் சொல்ல முடியுமா? 
சமூக சேவை செய்வது, மரங்களை நடுவது, ஆதரவற்றவர்களுக்கு பரிசுகள் வாங்கித் தருவது என்று வேறு மாதிரி புதிதாக யோசிக்க முடியுமா? ஹாலிடேஸ் என்பதை ஹோலியாக புனிதமாக பரிசுத்தமாக கொண்டாட முடியுமா அல்லது அவை வழக்கம் போல ஜாலி டேஸ் தானா? 
உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை, அறிவை, அனுபவங்களை பிறருடன் இந்த ஆண்டு முடிவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பகிர்வதைப் போல பரிசொன்று இருந்து விட கூடுமா? அப்படிப்பட்ட பரிசுகள் நீண்ட நாட்கள் நிலைக்கும். அவை நிச்சயம் கொண்டாட்டத்தின் உணர்வை புது விதமாக நமக்குத் திரும்பக் கொணரும். இவை எல்லாம் நான் சொல்லவில்லை. இன்று எனக்கு வந்த ஒரு வீடியோ செய்தி இப்படி எழுத வைத்தது. அதுவே உண்மை. 
நமது நாட்டில் கூட நமது பிரதேசங்களில் கூட புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் படாடோபமாக மாறி வருகிறது. அவற்றில் பெரிய விருந்துகள், பெரிய பரிசுகள், அதிகமான பானங்கள், மற்றும் கானங்கள், விருந்துகள் என்றே இருக்கின்றன. புத்தாண்டு என்றால் மதுபானம் அருந்தி விட்டு ஆண் பெண் பேதமின்றி கூடுவது ஆடுவது, கூச்சலிடுவது, கேக் வெட்டுவது, வீதிகளில் வாகனங்களில் வேகமாக பறப்பது, கூட்டம் கூட்டமாக அலைவது என்று இருப்பது தானா? ஏன் வேறு மாதிரி வித்தியாசமாக இருக்கக்கூடாது?
உண்மையில் அந்த நிலையற்ற தற்காலிக சந்தோசம் தான் நமக்கு கொண்டாட்டமா? வேறு என்ன செய்யலாம் புது விதமாக என்று அடுத்த தலைமுறை மக்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும். அதுவே உலகின் வளர்ச்சி. புது எழுச்சி. எல்லோருக்கும் மகிழ்ச்சி. 


இந்த பதிவு அல்லது கட்டுரை அறிவுரை அல்ல. ஆதங்கவுரை மட்டுமே. இப்படியெல்லாம் ஆதர்சமாக மாறி விட்டால் அது அதிர்ஷ்டமே. நடக்குமா அந்த அதிசயம் அல்லது அற்புதம்? காத்திருப்போம் அந்த இனிய நாட்களின் கொண்டாட்டங்களுக்கு. மனங்கள் மாறினால் மனிதம் மாறும். மாறுவோம். மாற்றுவோம். அதற்கு முயற்சிகள் ஏற்கனவே மேற்கொன்டு விட்ட சிலரை மனதார போற்றுவோம்.

No comments:

Post a Comment