Sunday, December 22, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 43


ஈக்களும் தேனீக்களும் ஒன்றல்ல 

தேனீக்கள் பொதுவாக கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஈக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். தேனிக்கள் மனிதர்களை தேள் போல கொட்டும். அந்த வலி பொறுத்துக்கொள்ள முடியாது. தேனீக்களுக்கு புரோபோஸ்கிஸ்  என்ற நாக்கு உண்டு. அவை பூக்களில் இருந்து தேனை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. ஈக்களுக்கு இரண்டு இறக்கைகள் உண்டென்றால் தேனீக்களுக்கு நான்கு உண்டு. 

உலகெங்கும் சுமார் 20,000 வகை தேனீக்கள் உள்ளதாக அறிகிறோம். அவை குளவிகள் எறும்புகள் பூச்சிகள் வகையை சார்ந்தது என்று அறிவியல் சொல்லுகிறது. தேன், தேனீ மெழுகு  மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு இவை பெயர்பெற்ற ஒன்றாகும்.

ஈக்களில் ஒரு லட்சம் இனங்கள் இருப்பதாக அறிகிறோம். குதிரை ஈக்கள், ஹோவேர் ஈக்கள் மற்றும் கிரேன் ஈக்கள் போன்ற வகைகள் உண்டு. வீட்டு ஈக்கள் எனப்படும் வகை ஈக்கள் மூலம் வாந்தி பேதி  காலரா காசநோய் டைபாய்டு போன்ற சுமார் 65 விதமான மிகக் கொடுமையான நோய்கள் மனித இனத்திற்கு பரவுகின்றன. கோடை நாட்களில் ஈக்கள் மிகவும் ஏரிச்சல் ஊட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றன. ஆண் ஈக்கள் பெண் ஈக்களை விட சிறியவையாக இருக்கும். 

தேனீக்களின் செய்யும் சப்தமும் மாறுபடுகிறது. தேனீக்கள் ஏற்படுத்தும் சப்தம் அவைகளுக்குள் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் என்றும் ஈக்களின் சப்தம் அர்த்தமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அடடா இது என்ன 'ஈ' படம் போல விடாது கருப்பு என்று இருக்கும் பூச்சியியல் பற்றிய கட்டுரையா?  அலுப்பு தட்டும் முன் முக்கிய விஷயத்தில் நுழைகிறேன் இதோ.

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான். உண்டால் அவை வேறு வேறு தான் என்பார்களே, அது போல நாம் இங்கே மிக முக்கிய மையப்புள்ளியை நெருங்கி விட்டோம்.நமது உறவுமுறையை மேம்படுத்த மிக முக்கியமான சில பாடங்களை இந்த ஈக்களும் தேனீக்களும் கற்றுத் தருகின்றன.

தேனீக்கள் மலர் விட்டு மலர் தாவிப் பறக்கின்றன தேனைத் தேடி. (நதி எங்கே போகிறது கடலைத் தேடி, நாளெங்கே போகிறது இரவைத் தேடி, நிலவெங்கே போகிறது மலரைத் தேடி, நினைவெங்கே போகிறது உறவைத் தேடி என்று பாடல் இருந்தாலும்) என்று நமக்குத் தெரியும். மலர்களை சற்றும் தொந்தரவு செய்யாமல் தேனைத் தேடுகிறது தேனீ (பூவுக்கே தெரியாமல் தேனை ருசிக்க வேண்டும் என்பது போல) அதனை சுவைக்க மட்டும் அல்ல தேனடையில் சேர்த்து வைக்கவும் தான். 

தேனீக்களின் மனதில் தேன் மட்டுமே இருக்கும். அது தேடும் மலர் குப்பை மேடோ குளமோ சாக்கடையோ, நாம் தேனை நாடிச் செல்ல வேண்டும் என்பதே அதன் கவனம். அங்கே அவை வேண்டாத குப்பைகளின் மீது கவனம் வைப்பதில்லை.  அதற்காக அவை பல மைல்கள் கடந்து பறந்து திரிகின்றன.நமது உறவுமுறையிலும் அப்படித்தான் செய்தல் வேண்டும். (அல்லவை  தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்றும் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்றும் வள்ளுவர்  சொன்னது இதைத்தான்).

ஒவ்வொரு  மனிதருக்குள்ளும்  இருக்கும் நல்லவை மற்றும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எப்படி கவனித்து ஏற்றுக் கொள்ளுவது தவறுகளை கண்டு கொள்ளாது இருப்பது என்பதை உணர்த்திக் கற்றுக் கொடுக்கின்றன இந்த தேனீக்கள். எதிர்பாராத இடத்தில் தேன் இருக்கும் மலர்களைத் தேடிப் போகும் தேனீக்கள் நமக்கு நல்லவர்களைத் தேடுவது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற நல்ல விஷயங்களைத் தேடிக் கற்பது என்பதே அது.

தேனீக்கு எதிர்மாறாக ஈக்கள் தான் சென்று அமரும் ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் கெட்ட தொற்று உறைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவற்றை தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்புகிற தீய பணியை தவறாமல் செய்கிறது. ஈக்களும் பல மலர்களை சந்திக்கும். ஆனால் அவை தேடுவதே அதில் உள்ள குப்பைகளை, அவை வெளியேற்றும் தொற்றுக்கழிவுகளை. ஈக்கள் மலத்தின் மீதும், பிணத்தின் மீதும், குப்பை கூளங்கள் மீதும் அமர்ந்து விட்டு நம் மீதும், நாம் உண்ணும் உணவின் மீதும் வந்து அமர்ந்து மிக அழகாக தொற்றைப் பரப்பும்.

அப்படி மனிதர்களும் தாம் சந்திக்கிற மனிதர்களின் கெட்ட விஷயங்களை நோக்குவதும், அவற்றைக் கற்றுக் கொள்ளுவதும் செய்கிறார்கள். அது மட்டுமா? ஈக்கள் போல சிலர் தேடித் தேடி கெட்டவர்களையே நாடுகிறார்கள்.பிறகு அவர்களிடம் பெற்ற கெடுதலான விஷயங்களை சமூகத்தில் பரப்புவதையே செய்கிறார்கள்.

ஈக்கள் அழகான தோட்டங்களில் பூவனங்களில் கூட அவை காண்பது கெட்ட அழுக்கு மற்றும் தொற்றுக்களையே என்பது மிகவும் அறுவருக்கக் கூடிய விஷயம் என்றால் அது மிகையாகாது.குற்றங்களை குறைகளை தேடும் மனநிலை என்பது மிகவும் எளிது. நல்லவற்றை நன்மையை மட்டும் தேடித் தேடிக் காண்பது மிக அரிது.

இது தான் தேனீக்களுக்கும் ஈக்களுக்கும் வித்தியாசம் என்று சொல்லலாம். குறை காண்பது எளிதென்பதால் அதனை சிலர் வெறித்தனமாக செய்கின்றனர் ஈக்கள் போல. குறைகளைக் கூட அழகாக மனம் நோகாமல் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்ல முடியும்.

ஒவ்வொரு மலரிலும் இருக்கிற தேனின் அளவு சிறிதென்றாலும் தேனீக்கள் அம்மலர்களை விடுவதில்லை. கொட்டும் குணம் இருக்கும் தேனீக்களை வளர்க்கிறார்கள். கொட்டாமல் கடிக்காமல் வெறுமனே நம்மை மொய்க்கும் ஈக்களை விரட்டவே பார்க்கிறோம் நாம். 

இருட்டிலும் வெளிச்சத்தைக் காண்பது சிலரால் மட்டுமே முடியும். குறையிலும் நிறையினைக் காண வெகு சிலரால் மட்டுமே இயலும். நாம் ஈக்களா அல்லது தேனீக்களா ? அது நமது மனநிலையைப் பொறுத்தே அமைகிறது

No comments:

Post a Comment