Sunday, December 29, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 49


பார்ப்பது தான் பார்வையா ?
நாம் காண்பது என்னவோ கண்கள் மூலம் தான். ஆனால் நாம் காணும் விஷயங்களை பிம்பங்களாக மாற்றித்தருவது நமது மூளையின் வேலையே. அதுவே கண் பார்வை அற்றவர்களின் மூளை விஷயங்களை பிம்பங்களாக மொழி பெயர்த்துப் புரிந்து கொள்ளச் செய்வது அவர்களின் காதுகள் எனலாம். இதனை ஒலி மூலம் பார்வை எனலாம்.
உலகில் சுமார் 285 மில்லியன் நபர்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களில் சுமார் 38 மில்லியன் மக்கள் முழுமையாகவே பார்வை இழந்தவர்களாக (குருடு என்று சொல்ல எனக்கு மனம் இல்லை) இருக்கிறார்கள். மேலும் 247 மில்லியன் மக்கள் பார்வையில் குறைபாடும் கோளாறும் கொண்டவர்களாக உள்ளனர். இப்படிப் பார்வையால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% மக்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்று இணையம் சொல்லுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் முழுமையாக பார்வை இழந்தவர்கள். மேலும் 48 மில்லியன் மக்கள் சுமார் அல்லது மோசமான கண் பார்வைக்கோளாறு உள்ளவர்கள் எனலாம்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக பார்வை நாள் என்று கொண்டாடப்படுகிறது. நமது வாழ்வின் பல்வேறு விஷயஙங்களை 80 சதவீதத்திற்கு மேல் பார்வையால் மட்டுமே அறிய முடியும். ஒளி விலகல் பிழைகள் அல்லது கதிர்ச்சிதரவு, கண்புரை, பசும்படலம் எனப்படும் குளுக்கோமா, வயதுக் கோளாறு, நரம்புச் சிதைவு மற்றும் நீரிழிவு நோயின் தீவிர பாதிப்பு இவற்றால் மக்கள் கண் பார்வை இழக்கிறார்கள். சிலர் பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
'தர்ஷனி' என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பார்வையற்ற அதே சமயம் கல்வியில் பல்வேறு சாதனை செய்து வாழ்வில் முன்னேறிய சுமார் 150 பேர் கலந்து கொள்ளும் ஆண்டு விழாவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு. அதன் மூலம் பார்வையற்றவர்களைப் பற்றி மேலும் அறிய வாய்ப்பு கிடைத்ததன் விளைவு தான் இந்த கட்டுரை.
விழா நடக்கும் நேரத்திற்கு முன்பே விழா நடக்கும் இடத்திற்கு சென்று விடும் பழக்கம் உள்ளபடியால் விழா மேடைக்கு செல்லும் முன்பே அங்கே வந்திருந்த சில ஆண் பெண் சாதனையாளர்களை சந்தித்து அவர்களோடு அளவளாவ முடிந்தது. பெரும்பாலும் அவர்கள் முதுகலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தனர். சிலர் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணியில், பேராசிரியர் பணியில், அரசுப் பணியில், அல்லது வங்கிப் பணியில் இருந்தனர். ஒருவர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களை ஆய்வு செய்து தனது முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஒரு பெண்மணி சொன்னார், ஒரு வேளை எனக்கு கண் தெரிந்து இருந்தால் என்னை எனது வீட்டில் படிக்க அனுமதித்து இருக்க மாட்டார்கள். இன்று நான் MA, B.Ed, படித்து இருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. என்னால் சைவம் மற்றும் அசைவ உணவை சுவையாக செய்ய முடியும் என்று சொல்லி சிரித்தார்.
இன்னொரு நண்பர் சொன்னார், எனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது மனைவி குறைகள் எதுவும் அற்ற பட்டதாரி. நான் முதுகலைப் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். எனது மாண்வர்கள்  தொழில் நுட்பம் மூலம் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பதனால் நான் என்னை தினம் தினம் மேம்படுத்திக் கொள்ளுகிறேன். புதுப்பித்துக் கொள்ளுகிறேன். எனது கைபேசியில் டச் மூலமும், வாய்ஸ் மூலமும் என்னால் புத்தகத்தை வாய்ஸ் மூலம் படிக்க முடியும், எனக்கான ஓலா காரை ஆட்டோவை புக் செய்ய முடியும். முகநூலில் பதிவிட முடியும் என்றெல்லாம் சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்கள் அவர்கள்.
'ஜெயமுண்டு பயமில்லை' என்று எனக்கு அளிக்கப்பட்ட தலைப்பில் ஒன்றரை மணி நேரம் பேசி, நடுநடுவே பாடல்கள் பாடி அவர்கள் உலகிற்குள் புகுந்து திளைத்தேன். சிலர் எனது பேச்சை தமது கைபேசியில் வீடியோ பிடித்ததை காண முடிந்தது.
அவர்களிடம் மிகுந்த தன்னம்பிக்கை இருந்தது. அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். யாருமே குறை கூறவில்லை. யாருமே நெகடிவாக பேசவில்லை. யாருமே அனுதாபத்தை இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உலகைப் புரிந்து கொள்ளும் எம்பதி அல்லது பச்சாதாபத்தை மட்டுமே விரும்புபவர்களாக இருந்தனர். மற்றொரு ஆச்சரியமான விஷயம் அவர்களின் ஒற்றுமை, மூன்று பேராக அல்லது நான்கைந்து பேராக ஒருவருக்கொருவர் அவர்கள் கைகோர்த்து கழிப்பறை சென்றார்கள். மிகவும் மரியாதையாக நடந்து கொண்டார்கள்.
மேலும் கைகுலுக்குவதன் மூலம், நமது குரல் மூலம் நம்மை பற்றிய பிம்பத்தை அவர்களால் உள்வாங்கிட முடிந்தது. நாட்டு நடப்புகள் தெரிந்து வைத்திருந்தார்கள். நடைபாதை நடக்கும் வகையில் இல்லை. ஆங்காங்கே பள்ளம் மேடு உள்ளதையும், எதிர்பாராத பள்ளங்கள் இருப்பதையும் பற்றி மட்டுமே ஆதங்கப்பட்டார்கள். அவர்களின் ஆச்சரியமான உலகை கண்டு வியந்து போனேன்.
மனதின் மூலம் உள்வாங்கும் விஷயங்கள், நமது நுண்ணறிவு (இன்சைட்) மூலம் நாம் மனதால் கூடப் பார்க்க முடியும் என்ற ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தை இன்று உறுதி செய்து கொள்ள முடிந்தது. "நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்" என்ற பாடல் வரிகள் மனதில் வந்து போயின.  அவர்கள் பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை. அதன் மணம் அறிவர். கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை. ஆனால் அது விழுகின்ற சத்தம் அவர் அறிவர். அது போல நம்மை எல்லாம் காணாமலேயே புரிந்து கொள்ளுகின்றனர் நமது தொடுதல் மற்றும் குரல் கொண்டு. 
அவர்களைப் பற்றிய எனது பார்வை நிச்சயம் மாறித்தான் போனது. இந்த மாற்றுத் திறனாளிகள் பலர் பாடுகிறார்கள், வயலின், புல்லாங்குழல், கீபோர்டு, தபலா, மற்றும் கிட்டார் வாசிக்கிறார்கள். பலர் போல மிமிக்ரி செய்கிறார்கள். பார்வை இருந்தும் தவறுகள், குற்றங்கள், கொடுமைகள், தீங்குகள் செய்கிற மக்கள் போல இவர்கள் இல்லை. இவர்கள் தீங்கைப் பார்க்கவும் இல்லை. தீங்கு விளைவிப்பதும் இல்லை. இவர்கள் நன்மக்கள் மற்றும் மேன்மக்கள் என்பதே சரி.
எனவே பார்வை என்பது பார்ப்பது மட்டுமல்ல. மனிதர்கள், பொருட்கள், விஷயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய நமது கருத்து (பெர்ஸப்ஷன்) என்பதுவும் பார்வை தான். வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம். நமது சவால்களை, நமது கடினமான சூழல்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுவும் பார்வை தான். சவால்களை அணுகும் முறை, சூழலில் இருந்து மீண்டு எழுகிற பாங்கு, சமூகத்திற்கு நாம் தரும் பங்கு இவை எல்லாமே கூட பார்வை தான். உண்மையில் எனது கண்கள் இன்று திறந்து கொண்டது. 



No comments:

Post a Comment