Tuesday, December 24, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 46


டிஜிட்டல் டயட் தொடங்குவோமா?
மக்கள் தமது  எடையைக் கூட்ட, குறைக்க அல்லது பராமரிக்க சரியான, சீரான, சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ளுகின்றனர். தவிர, நீரிழிவு நோய் மற்றும் இதய சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் இந்த உணவுக்கட்டுபாடு இருக்கும். உணவுக்கட்டுப்பாடு தவிர உடற்பயிற்சியுமே  உடல் எடையினை சீராக வைக்க, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
செல்வந்தராக இருப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதே இன்றைய காலகட்டத்தில் முன்னுரிமையாக இருக்கிறது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பர் பெரியோர். நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் உறக்கம் உட்பட நமது  இதர பழக்க வழக்கங்கள் தான் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
அதே போல நாம் ஆனந்தமான, ஆரோக்கியமான, அற்புதமான வாழ்வினை வாழ எது நிர்ணயம் செய்கிறது என்றால் நமது டிஜிட்டல் டயட் தான். முடிவில்லாத (அன் எண்டிங்) அளவிற்கு நாம் சாதனங்களோடு நம்மை இணைத்துக் கொண்டு விட்டோம்.(மனிதர்களோடு இருக்கும் இணைப்பு சற்று அதிகமாகவே  துண்டிக்கப்பட்டு சாதனங்களோடு இணைக்கப்பட்டு நிற்கிறோம்). இது நமது உடல் மற்றும் மனநலனை சீர்குலைக்கிறது என்பதை பெரும்பாலும் நாம் உணர்வதே இல்லை. 
நமது நாளின் (24 மணி நேரம் என்பது எல்லோருக்கும் பொது என்றாலும்) பெரும்பகுதி தூக்கத்தில், பணியிடத்தில் கழிகிறது. மீதமிருக்கும் நேரத்தில் (பயணத்தில், கழிப்பறையில், காத்திருப்பு நேரங்களில், சாப்பிடும் போது, டிவி பார்க்கும் போது என்று) நாம் கையில் வைத்திருப்பது நமது கைபேசி தான். எப்போதும் உட்கார்ந்தே இருக்கிறோம். கைகளும் கண்களும் மிகவும் ஆக்கிரமிப்பில் உள்ளன. நமது உட்காரும் தோரணை, வேலை செய்யும் தோரணை எதுவுமே எப்படி இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவே நேரமில்லாது கைபேசி அடிமைகளாக மாறி விட்டோம். 
என்ன சாப்பிடுகிறோம், எந்தப் பொருளை எங்கே வைத்தோம், என்ன பார்க்கிறோம், என்ன செய்கிறோம் எதுவுமே நமது          பிரக்ஞையில் இல்லை என்பதே உண்மை. அறிவுசார் தகுதி முக்கியமா அல்லது தகவல் பருமன் முக்கியமா? (தகவல்களால் அறிவு பருமன் ஆவதை விட மூளை தகுதியுடன் சுறுசுறுப்பாக இருக்கிறதா என்பதே முக்கியம் )  அதிகம் உண்ணுபவர்களின் உடல் எப்படி இருக்கும்? மிகவும் குண்டாக எடை அதிகமாக பார்க்க பருமனாக இருக்கும். அவர்கள் எப்போதும் மந்தமாகத் தான் இருப்பர். அதே போலத்தான் அதிக தகவல்களால் சூழ்ந்து கிடப்பவர் நிலையும். ஓவர் தகவல் ஒடம்புக்கு ஆகாது.
பெரும்பாலும் சுயசிந்தனை, கற்பனை, படைப்பாற்றல் எல்லாமே மூட்டை கட்டி வைக்கப்படுகிறது என்பது தான் சாயம் பூசப்படாத உண்மை.  சாதனங்கள் நம்மை ஆட்படுத்தி அடிமைப் படுத்துகின்றன நமது மூளையின் 'இன்ப மையம்' (ப்ளெஷர் சென்டர்) எனும் பகுதி எப்படி மீண்டும் புகைக்க வேண்டும், மது அருந்த வேண்டும், புகையிலை மெல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கிறதோ, அப்படித் தான் நம்மை மீண்டும் மீண்டும் மீள முடியா வண்ணம் இந்த சாதனங்கள் நம்மை முடக்குகின்றன. இது ஒருவிதமான போதை தான். இப்போது குடிநோயில் இருந்து விடுபட உள்ள 'மீட்பு மையம்' போல இந்த கைபேசி போதை மயக்கத்தில் இருந்து மீட்கும் மையங்கள் சில இடங்களில் தொடங்கி விட்டனர் நமது நாட்டில். சிலர் மனசிதைவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் கிடைக்கும் செய்தி.  என்ன ஆச்சரியமா? இல்லை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா?
எது நூடுல்ஸ், பிச்சா, சிப்ஸ், கோலா என்று குழந்தைகளை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுகிறதோ, எது பெரியவர்களை புகைக்க, மது அருந்த, புகையிலை மெல்லத் தூண்டுகிறதோ அதே 'கெமிக்கல்' விஷயம் தான் கைபேசி போதையில் மனிதனை ஆட்படுத்துகிறது. 
மனிதர்களோடு நட்பு கொள்ள, வணிகம் பெருக்க, செல்ப் பிராண்டிங் எனப்படும் சுய முத்திரையை நிலைநாட்ட, வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்க்க, தமது விஷயங்களை பிறருக்கு தெரிவிக்க, காதல் செய்ய, சமூகத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள என்று தான் வலைத்தளங்களில் நுழைகிறோம். ஆனால் வலையில் சிக்கிய மீன்கள் போல ஒரு முறை நுழைந்தால் மீண்டு வர முடியாது சிக்கித் தவிக்கின்றோம்.  அவர்களை மீட்க எண்ணும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோருமே இதே நிலையில் உள்ளபடியால் யார் வந்து யாரை மீட்பது. குழியில் விழுந்த ஒருவரை மேட்டில் நிற்கும் ஒருவரால் தானே தூக்கி விட்டு காப்பாற்ற முடியும்? இருவருமே குழியில் படுகுழியில் இருந்தால்? 
சரி, இந்த டிஜிட்டல் டயட் என்பது என்ன? இந்த ஸ்மார்ட் போன் நேரத்தை குறைத்தல், தூங்கும் போது அவற்றை 'ஸ்லீப் மோடில்' (விமானத்தில் போகும் போது 'பிளேன் மோட்' மாற்றுவது போல்) மாற்றுவது, கண்களுக்கு கைகளுக்கு கழுத்துக்கு சற்று ஓய்வு கொடுத்து இயற்கை காட்சிகளை ரசித்தல், அருகில் இருக்கும் ஒருவரோடு அளவளாவுதல், ஓரிரு மணி நேரமாவது நெட்டில் இருந்து போனை துண்டிப்பது, என்று பலவாறாக உபவாசம் இருந்து விரதம் இருந்து நோன்பு காப்பது போல இருப்பதே இந்த டிஜிட்டல் டயட் என்பது. தவிர இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை குறைந்தது இருபது வினாடிகள் நமது கைகளுக்கு கண்களுக்கு ஓய்வு தேவை. அதுவே மூன்று முறை இந்த இருபது நிமிடங்கள் நிறைவடைந்த பிறகு சுமார் ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடம் வரை இயற்கை அல்லது பசுமை விஷயங்களை பார்த்து கண்களுக்கு மனதிற்கு ஓய்வு தர வேண்டும். இல்லையேல் கண்களில் இருக்கும் நீர் வறண்டு எரிச்சல் தொடங்கி விடும். 
சாதனங்களில் இருந்து வருகிற கதிர்கள் நமது உடலின் பெரும்பாலான முக்கிய பகுதிகளை பாதிக்கிறது என்றும் அறிவியல் சொல்லுகிறது. இன்று 95 சதவீதம் மக்கள் இந்தியாவில் செல்பேசி பயன்படுத்துகின்றனர். மேலும் கணினி இல்லாத துறையே இல்லை எனலாம்.
தொழில்நுட்பம் நமது வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதம் தான். சில சமயம் வரமே  ஒரு மிகப்பெரிய சாபமாக மாறிவிடக் கூடாது என்பது நமது கையில் தான் இருக்கிறது. கத்தி கொண்டு ஒரு கனியை நறுக்கலாம். கழுத்தையும் நறுக்கலாம். ஒரு தீக்குச்சியால் விளக்கு ஏற்றலாம். ஒரு காடையே கொளுத்தலாம். அதே போலத்தான் இந்த தொழில்நுட்பம் மற்றும் அது குறித்த சாதனங்கள், அவை நமக்கு நல்லது செய்ய, அறிவைப் பெருக்க, அறிவுப்பளு குறைக்க அல்லது மேம்படுத்த உதவலாம். ஆனால் அப்படி ஆக்கும் சக்தி படைத்த ஒன்றே அழிக்கும் சக்தியாக மாறிடாது இருக்க இந்த டிஜிட்டல் டயட் மிகவும் முக்கியம். இது செவ்வாய், சனி விரதம் போலத்தான்.
நாம் உட்பட எல்லாமே மிகச் சரியாக அழகாக இயல்பாக சீராக இயங்கும் நாம் சற்று நேரம் இந்த சாதனங்களின் ஒயரை பிடுங்கி வைத்தால். ஆனால் முடியுமா? ஆபத்தில் இருக்கும் நம்மை காக்கும் 'காவலன்' கூட இந்த சாதனத்தில் தானே இருக்கிறது. 'கடவுளை'க் கூட அந்த அளவுக்கு நம்ப முடியாத காலத்துக்கு வந்து விட்டோமே !! அகால நேரத்தில் கோவிலுக்குள் யார் வந்தார், யார் சிலை போன்ற திருட்டு வேலைகள் செய்தார் என்று அறிய நமக்கு சில சாதனங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் எதுவமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான். தெரிவோம். தெளிவோம். உபவாசம் எப்போது?

No comments:

Post a Comment