Friday, July 9, 2021

நீங்கா நினைவலைகள் - 15

 நீங்கா நினைவலைகள் - 15

- பாலசாண்டில்யன் 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. வழக்கம் போல வீடு சுத்தம் செய்யும் படலம், இசை அமர்க்களம் என்று வழக்கமான சிறப்பு மூடில் இருந்தது எனது அத்தை வீடு. ஸ்பூல் டேப் ரெக்கார்டர் பாட, கூடவே அத்திம்பேர் பாடிக்கொண்டிருந்தார். நான் மட்டும் சற்று மூட் அவுட். ஓசைப்படாமல் என்னுடைய பொருட்களை இரண்டு பெட்டியில் பாக்கிங் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தார் அத்திம்பேர். என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. 

சாப்பாடு முடிந்து மதியம் மணி மூன்றைத் தாண்டியது. அத்தை அத்திம்பேரை நிற்க வைத்து நமஸ்காரம் பண்ணினேன். அவர்கள் கேட்பதற்கு முன்னரே சொல்லி விட்டேன். "உங்க பிரென்ட் ராஜகோபாலன் மாமா இருக்கிற சயான் ஈஸ்ட்ல  'பாரடைஸ் 2' வில் மாடியில் பாச்சிலர் ரூம் பார்த்து இருக்கேன். வாடகை குறைவு தான். இங்கே சேகருக்கு பிரைவசி வேண்டும் அல்லவா?  அதனால ....ஹுஹும்  அங்கே போவதற்கு என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்" என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்து மனப்பாடம் செய்ததை அப்படியே சொன்னேன். அத்தை சற்று கண் கலங்கி, என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு "நிச்சயம் இது முன்னேற்றம்தாம்பா. நீ இன்னும் மேல மேல வாழ்க்கையில நல்லா வரணும்" என்றார். அத்திம்பேர் "இங்கே இருப்பது போலத்தான் ராஜகோபால் வீடும். தைரியமாக போ. இதோ உன்னை சேகர் வந்து கொண்டு விடுவான். வீக் எண்டுக்கு எங்கியும் போகாதே. இங்கே தான் நீ சாப்பிட வரணும். புது வேலையை நன்னா செய். நீ நல்ல உழைப்பாளி, புத்திசாலி.  இன்னும் முன்னுக்கு வரணும். இது நல்ல முடிவு தான். பகவான் ஒன்னை நன்னா வச்சுப்பான்" என்றார்.

"அத்திம்பேர் நீங்க குடுத்த அன்பு, ஆதரவு, உதவிகள், அத்தையோட பாசம் எதுக்குமே நான் ஜஸ்ட் தாங்க்ஸ் சொல்லி முடிக்க மாட்டேன். அத என் வாழ்நாள் முழுசுமே நெனெச்சுண்டு இருப்பேன்" என்றேன். அத்திம்பேர், 'இது என் கடமைப்பா, எனக்கு சேகர் வேற நீ வேற இல்ல' என்று நா தழுதழுத்தார். (அவருக்கு ரவி என்று இன்னொரு மகன் பிறந்து தவறி இருந்தான், நான் பார்த்தது இல்லை - அவனை நினைத்துப் பார்த்தேன்)

நானும் சேகரும் ஆளுக்கு ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு மனதில் ஒரு பயமும் நடக்கத்துடனும் மெயின் ரோடு கிராஸ் செய்து 'பாரடைஸ் 2' வந்து சேர்ந்தோம். இது வரை இது போல நான் தனியாக இருந்ததில்லை. சேகர் மாடிக்கு வந்து பெட்டியை வைத்து விட்டு 'வா கீழே ராஜு மாமா வீட்டுக்கு போகலாம்' என்றான். இறங்கும் போது கேட்டான், "டேய் தனியா மேனேஜ் பண்ணுவியா" என்று. கீழ் பிளாட்டில் மகாதேவன் (அண்ணா), பிரபாகர், ரவி, மாமா, மாமி எல்லோரும் இருந்தனர். மாமா சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு பளபள என்று இருந்தார். 

சேகர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு புறப்படும் போது என் ரூம் மேட் நியூ இந்தியா சேகர் (மஹாதேவன் உறவினர்) வந்தான். அவனையும் பார்த்து பேசி விட்டு சேகர் நகர்ந்தான். வெளியே போய் பாய் ஜமுக்காளம் தலையணை, பக்கெட், மக் எல்லாம் வாங்கி வந்தேன். இரவு பாயில் படுத்தேன். எதிரில் ரயில்வே லைன். அடிக்கடி (பத்து நிமிடத்திற்கு ஒரு முறை) எலக்ட்ரிக் ரயில் போவதும் வருவதும் இரவு சுமார் பனிரெண்டரை வரை தொடர்ந்தது. மீண்டும் விடியற்காலை நான்கு மணிக்கே மீண்டும் தொடங்கியது. தலையில் தட தட எனும் சத்தம். அப்படியே பால்கனி கூட அதிரும் ஓசை கேட்டது. நான் தூங்காது புரண்டு புரண்டு படுப்பதைப் பார்த்த சேகர் சொன்னான் 'கொஞ்ச நாளில் பழகி விடும்' என்றான் பால்கனியில் காலை நீட்டிக்கொண்டு ஸ்டைலாக கையில் ஒரு குண்டு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு.

உண்மையில் அது எனக்குப்  பழக ஆரம்பித்தது. கீழே காலை காபி மஹாதேவன் வீட்டில் தான். அந்த மாமி எது செய்தாலும் அவ்வளவு சுவையாக இருக்கும். வா வா என்ன சாப்பிடறே என்று அப்படி உபசரிப்பார். சில இரவுகளில் மழை, பந்த், வேறு ஏதாவது பிரச்சனை என்றாலும் எனக்கு அவர்கள் வீட்டில் தான் சாப்பாடு. நிச்சயம் நான் காலை நேரத்தில் அத்திம்பேர் தரும் டீயை மிஸ் செய்தேன். அப்போது தான் மஹாதேவன் அண்ணாவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். வாக்கிங் போய் ட்ரிம் ஆக வேண்டும் என்று நினைத்தவர் என்னையும் தினம் அந்த சயான் ஈஸ்ட் (கிங்ஸ் சர்க்கிள்) முதல் வடாலா  சென்று பாஞ்சு கார்டன் (ஐந்து பூங்கா) வரை மாங்கு மாங்கு என்று நடந்து விட்டு வந்தவுடன் அவர் வீட்டில் மணக்கும் சுவையான காபி கிடைக்கும். 

எட்டு மணிக்கு ஆபீஸ் புறப்பட வேண்டுமே என்று  மாடிக்கு வந்தால் தூக்கம் தூக்கமாக வரும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு காக்கா குளி குளித்து, துணி துவைத்து உலர்த்தி மிக அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் போவேன். வழக்கம் போல பாந்திரா வரை ஒரு ரயிலில் சென்று பிறகு பிளாட்பார்ம் மாறி ஜோகேஷ்வரி போவேன். அங்கிருந்து ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் நடந்தால் தான் பேக்டரி வரும். சில நேரம் ஆபீஸ் நண்பர்கள் இருவர் சேர்ந்து கொண்டால் ஓர் ஆட்டோ பிடித்து போய் விடுவோம். அது எப்போதாவது தான். என்ன கையில் சாப்பாடு டப்பா கிடையாது. மேலும், முதல் வகுப்பு சீசன் பாஸ் மூன்று மாதத்துக்கு எடுத்து விட்டபடியால், டிக்கெட் வாங்கிட தினம் வரிசையில் நிற்க வேண்டாம். முட்டி மோதி ரயிலில் ஏற வேண்டாம். 

அங்கே அலுவலக காண்டீனில் இருந்து நமது மேசைக்கே டிபின் கொண்டு வந்து கொடுப்பார்கள். பிக்சட் மெனு என்பது போல (திங்கள் இது செவ்வாய் இது என்று) சாம்பார் இட்லி, சாம்பார் வடை, உருளை போண்டா, அவல் உப்புமா எனும் போஹா, வாரத்தில் சனி அன்று ஜவ்வரிசி வடை அல்லது வெங்காய பக்கோடா மற்றும் கேசரி என்று கொடுத்து விட்டு எல்லோரிடமும் கூப்பன் வசூல் செய்வான் ஒரு பையன். பிறகு டீ காபி இரு முறை வரும். மதிய சாப்பாடு 75 பைசாவில் - அருமையாக பூரி அல்லது சப்பாத்தி டால், சாதம், பொரியல், சாம்பார், தயிர், ஊறுகாய் என்று வக்கணையாக இருக்கும். அது கொங்கணி (மங்களூரு கம்பெனி) நிறுவனம் என்பதால் சாப்பாடு உடுப்பி ஸ்டைலில் அருமையாக இருக்கும். வீட்டில் இருந்து வருகிறவர்கள் கூட அவற்றை வாங்கி சாப்பிடுவார்கள். ரொம்ப மலிவு விலை. நல்ல டேஸ்ட் மற்றும் தரம் தான் காரணம். எனக்கு சில நேரம் பக்கத்தில் இருக்கும் வர்ஷா பட் அல்லது எலிசபத் அல்லது வைத்தியநாதன் ஸ்பான்சர் செய்வர். எல்லாம் ஒரு பாசம் தான். வர்ஷா திருமணம் ஆனவர். வைத்தி நம்ம விக்ரம் படத்தில் வருகிற அம்பி போல. 

ராமதுரை சார் சொன்ன அந்த 'டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்' படிப்பில் சேர்ந்தேன். ஆனால் அது மாலை சர்ச் கேட் வரை போக வேண்டும். அதாவது பாம்பேயின் முதல் கோடி எனலாம். வருகிற ஏதாவது ரயிலில் ஏறி அடுத்த ஸ்டேஷன் அந்தேரியில் இறங்கி அங்கிருந்து பாஸ்ட் ட்ரெயின் (நிறைய ஸ்டேஷன்களில் அது நிற்காது) பிடித்து சர்ச் கேட் போய் நான் படிக்கும் அந்த காலேஜ் போக வேண்டும். கொஞ்சம் மிஸ் செய்தால் கூட டென்சன் தான். அதனால் அந்த 5.30 மணி சைரன் ஊதியதுமே நான் எழுந்து ஓடுவேன். வழியில் பசிக்கும். ரோட் கடைகள் நிறைய உண்டு. பெரும்பாலும் 'வெஜ் சான்ட்விச்' சாப்பிடுவேன். ரொம்ப சுவையாக இருக்கும். இல்லையேல் தஹி பூரி, பாவ் பாஜி, வடா பாவ் என்று  ஏதாவது ஒன்று சாப்பிடுவேன். நேரம் இருந்தால் தமிழ்க்காரர் கடை ஒன்றில்  பட்டர் தோசை அல்லது மினி மசாலா தோசை சாப்பிடுவேன். 

பிறகு கிளாஸ் முடித்து திரும்பி மாதுங்கா வெஸ்ட் ஸ்டேஷனில் இறங்கி மேல் பிரிட்ஜ் வழியாக நடந்து அங்கே உள்ள ஏதாவது ஒரு சவுத் இந்தியன் சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு நடந்து போக வேண்டும். எனக்கு விலையைத் தாண்டி இலை நிறைய சிலர் சாதம்  போட்டிக்கொண்டு வளைத்து சாப்பிடுவர். நான் கொஞ்சமாக போட்டு கொறிக்கும் டைப். (அங்கே எனக்கு பிடித்த மாதிரி ரசம் சாதம் நெய் பொரியல், தயிர் சாதம் ஊறுகாய் மட்டும் கிடைக்கும் ஒரு உடுப்பி ஹோட்டல் கண்டுபிடித்தேன், அங்கே  விலை கொஞ்சம் குறைவு, ருசி மற்றும் கவனிப்பு அதிகம்.  வீடு வந்து மஹாதேவன் வீட்டில் ஒரு விசிட், சின்ன அரட்டை பிறகு சற்று மாடிக்கு போய் ட்ரெஸ் மாற்றி படிப்பு, தூக்கம் எல்லாம். தூங்குவதற்கு முன்பு பிரார்த்தனை உண்டு. அப்போதும் ரூம் மேட் சேகர் வந்திருக்க மாட்டான்.

அவன் கோலிவாடா குவாட்டர்ஸ்ல வீடு காலி, யார் தங்கைக்கு ஜாதகம் வேண்டும், யாருக்கு வேலை வேண்டும் என்று பல இலவச சேவைகள் செய்து விட்டுத் தான் வருவான். அவனுக்கு நண்பர்கள் குழாம் மிக அதிகம். நானும் அவனும் சந்திப்பதே மிக துர்லபம்.

நாங்கள் குடியிருந்த 'பாரடைஸ் 2' விற்கு எதிரில் தான் பம்பேயின் மிகவும் பிரபலமான 'ஷண்முகானந்தா ஹால்' இருந்தது. வாரக்கடைசி மாலைகளில் பிரபல பாடகர்களின் கச்சேரி உண்டு. ஆயுள் உறுப்பினர்கள் ரைட் ராயலாக நுழைவார்கள்.சிலர் டிக்கெட் வாங்கி நுழைவார்கள். ரூம்மேட் சேகர் கொடுத்த ஐடியாவில் நானும் அங்கே வாலன்டியர் ஆக சேர்ந்து கொண்டேன். வருகிறவர்களின் டிக்கெட் செக் செய்து அவர்களை உள்ளே அனுப்புவது, பிறகு கச்சேரி தொடங்கி விட்டால் வேலை இல்லை. நாமும் உள்ளே அமர்ந்து கச்சேரி கேட்கலாம் இலவசமாக. அது தானே இங்கே முக்கியம். நடுவே சூடா போண்டா காபி வேறு. 

மூன்றே வாரங்களில்  அங்கே தொடங்கிய புதிய பாட்ச்சில் கர்நாடக இசை வகுப்பில் சேர்ந்தேன். வாரம் மூன்று வகுப்புகள். அங்கே படிக்கும் இசை மாணவர்களுக்கு கச்சேரி கேட்க கட்டணம் இல்லை. இந்த பாட்டு கிளாசில் சேருவது எனது ஜென்ம சாபல்யம் மாதிரி. எனது டிப்ளமோ வகுப்பும் வாரம் மூன்று வகுப்புகள் என்பதால் எந்த தொந்தரவும் இல்லை.  சரளி வரிசை, ஜண்டை வரிசை, கீதம், கீர்த்தனை என்று சுமார் மூன்றரை வருடம் அங்கே முறையான சங்கீதம் கற்றுக்கொண்டேன். எனது டீச்சர் ஓர் ஆல் இந்தியா ரேடியோ ஆர்டிஸ்ட்.- லட்சமி கணபதி அவர் பெயர். மிகவும் பொறுமைசாலி, திறமைசாலி, கிட்டத்தட்ட எனது அம்மா வயது. இடையிடையே நிறைய கச்சேரிகள் கேட்பது பரமசுகம்.

இதற்கு நடுவே வாரக் கடைசியில் செம்பூரில் இருந்து பிஎச்இஎல் சாய் (அதான் என் சித்தப்பா), அத்தை பையன் சேகர் மற்றும் நான் மூவரும் த்ரீ இடியட்ஸ் போல நல்ல கூட்டணி. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா ஜிதேந்திரா நடித்த மாவாலி, தோபா போன்ற  படங்கள், கமல் நடித்த  ஏக் துஜே கே லியே, சனம் தேரி கசம், சாகர், பிறகு ரேகா நடித்த குப்சூரத், சில் சிலா, உம்ராவ் ஜான் என்று படங்கள். டிக்கெட் செலவு எல்லாமே சாய் கணக்கு தான். பிறகு சாப்பிட அத்தை வீட்டுக்கு வருவோம். 

என்ன ரொம்ப நீளமாகி விட்டதா ? கவலை வேண்டாம். மீதியை அடுத்த பகுதியில் பார்ப்போம். 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment