Monday, July 12, 2021

நீங்கா நினைவலைகள் - 18

 நீங்கா நினைவலைகள் - 18

- பாலசாண்டில்யன் 

என்னை வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்த அம்மா அப்பா இருவருக்குமே விமான வழிப் பயணம் முதல் முறை. ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தது போல அப்பாவுக்கு  ரயில்வே முதல் வகுப்பு பாஸ் உண்டு என்றாலும், வீட்டில் பாட்டிகளை, தம்பி தங்கைகளை தனியாக விட்டு விட்டு வந்ததால் விமானத்தில் வந்து விமானத்தில் திரும்பிட திட்டமிட்டு வந்திருந்தனர். 

வண்டி கிளம்பியது பாம்பை விட்டு. ஏர்போர்ட்டுக்கு என்னுடன் அம்மா, அப்பா, அத்தை பையன் சேகர், என் புதிய ரூம் மேட் திவாகர் சித்தப்பா எல்லோரும் வந்தனர். செக்யூரிட்டி செக் வரை அவர்கள் உள்ளே வர அப்போது அனுமதி இருந்தது. காலை நேர பிளைட். எனக்கு எல்லாமே புதுசு. பெட்டிகளை எடை போட்டு உள்ளே தள்ளி விட்டு, கையில் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் வைத்துக்கொள்ளும் பௌச் சகிதம்  ஒரு சிறிய ஹாண்ட் லகெஜுடன்  இவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து நின்றேன். என்னை அறியாமல் கண்ணில் நீர். முதல் முறை அப்பா வெகு நாட்களுக்கு பிறகு என் தோள் மீது கைவைத்து அழுத்தினார். "ஜாக்கிரதையா போயிட்டு வா,  பார்த்து நடந்துக்கோ" என்றார். நான் வெறுமனே 'ஹூம்' என்றேன் ஈன ஸ்வரத்தில் அவரது ஸ்பரிசத்தை உணர்ந்தவாறு. அம்மா அழுகையை அடக்கிக் கொண்டு, "அங்க சாப்பாடெல்லாம் ஒழுங்கா கிடைக்குமாப்பா? உடம்பைப் பாத்துக்கோ, முடிஞ்சா பாலா பெரியம்மா பையன் முரளிக்கு டெலெக்ஸ் அனுப்பு" என்றார். 

அதற்குள் சேகர், "சலோ பாயி அந்தர், டைம் ஓரஹா ஹை" (நேரமாச்சு உள்ளே போ பிரதர்) என்றான். நாங்கள் இருவரும் அடிக்கடி இப்படி ஹிந்தியில் தான் பேசிக் கொள்ளுவோம். கழுத்தை அவர்கள் பக்கம் திரும்பியபடி  நான் முன்னே நகர்ந்தேன் மனதில் இனம் தெரியாத பயத்தோடு. செக் செய்து உள்ளே போய் அமரச் சொன்னார்கள். பிறகு அறிவுப்பு வர எதிரில் இருந்த கேட் வழியாக வெளியே சென்று நின்றிருந்த பஸ்ஸில் ஏறி விமானம் சென்று அடைந்தேன். எமிரேட்ஸ் பிளைட். வணக்கம் சொல்லி சீட்டு வரை வந்து வழிகாட்டினார் அந்த பணிப்பெண். அவரே பெல்ட் மாட்டி விட்டார். "எவ்வளவு நேரம் எடுக்கும்?" என்று கேட்டேன். "ஒரு மணி நேரம் பத்து  நிமிடம்" என்றார் தன் இனிமைக்குரலில்.  பாம்பே நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் பின்னால் தான் மஸ்கட் (சுல்தானேட் அப் ஓமான்). விமானம் கிளம்பும் முன்பு காதில் வைத்துக்கொள்ள பஞ்சு கொடுத்தார்கள். பிறகு சாக்லேட் கொடுத்தார்கள். வெல்கம் ட்ரிங்க்ஸ் என்று ஜூஸ் கொடுத்தார்கள். வேண்டாம் என்றேன். படிக்க செய்தித்தாள் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து வந்து குடிக்க என்ன வேண்டும் (சாம்பேன், பீர், வைன்)? என்று வினவினார் ஒரு பெண். எதுவும் வேண்டாம் என்ற எனக்கு புன்னகையுடன் ஆரஞ்சு கான் ஜூஸ் அவரே ஓபன் செய்து கொடுத்தார். குடிக்கும் போது ஆரஞ்சு சுளைகள் வந்து வாயில் தென்பட்டன. அலாதி சுவை. இன்னும் சற்று நேரத்தில் வெஜ் புலாவ், சப்பாத்தி டால், ஒரு ஸ்வீட், என்று கொடுத்தார்கள். சிலருக்கு சிக்கன் மற்றும் எக் கூட வந்தது. அதிகமாக ட்ரிங்க்ஸ் மற்றும் சிக்கன் வாடை முன்னும் பின்னும் இருந்து வந்தது. 

அந்தப் பெண்கள் எல்லோருடைய சாப்பிட்ட, குடித்த பிறகு இருந்த அந்த குப்பைகளை மிக நாசுக்காக வாங்கிச் சென்று அமர்ந்தார்கள். அதற்குள் மஸ்கட் வந்து விட்டது. மற்றவர்களை நான் அப்படியே தொடர்ந்தேன். எனது பாஸ்போர்ட்டை செக் செய்து சீல் குத்திய பிறகு, பெல்ட்டில் வந்த எனது ஒரு பெட்டி மற்றும் பெரிய பையை (அதில் நீல் கலர் ரிப்பன் கட்டி இருந்தேன்) அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டேன். டிராலி ஒன்று இழுத்து வந்து அதில் தூக்க முடியாமல் வைத்து தள்ளிக் கொண்டு எக்ஸிட் கேட் நெருங்கும் பொழுது அங்கே சந்தனக் கலரில் நீண்ட குர்தா பிறகு பைஜாமா (பதான் ட்ரெஸ்) அணிந்து வாட்டசாட்டமாக ஒருவர் எனது பெயர் கொண்ட கார்ட் வைத்துக் கொண்டு நின்றிருந்ததை நான் காணத் தவறவில்லை. அவரே வலிய வந்து என் டிராலியை வாங்கித் தள்ளிக் கொண்டு எங்கள் கம்பெனி பெயர் எழுதிய (அலி ஷஹானி குரூப் ஆப் கம்பெனிஸ்) ஒரு ஜீப்பில் (முன்புறம் அமர்ந்து கொள்ளும் கேபின், பின் பாதி திறந்த பகுதி அதில் லக்கேஜ்  வைக்கும் இடமாக இருந்தது.

அவர் தன்னை 'சுல்தான், பர்சோனால் மேனேஜர்'  என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். என்னைப் பார்த்து நீங்கள் பாம்பே தானா அல்லது மதராசியா என்று கேட்டார். நான் 'மதராஸி' என்ற பொழுது அங்கே கம்பெனியில் மதராஸிகள் இருப்பதாகச்  சொன்னார். பகல் நேரம் என்பதால் அந்த ரோடுகளின் சுத்தம், அழகு, சிக்னல் வரும் பொழுது மக்களின் ஒழுங்கு எல்லாமே வியப்பாக இருந்தது. நிறைய பேர் முழுவதும் வெள்ளை ஆடை அணிந்து தலையில் கருப்பு முண்டாசு அணிந்து வண்டிகளில் அமர்ந்து இருந்தனர். பெண்கள் யாருமே கண்ணில் படவில்லை. ரூவி தாண்டி இடது புறம் அல் வாதி கபீர் போர்ட் தெரியும் போது புழுதி பறக்கும் ரோட்டில் சர்ரென்று திரும்பி  பாக்டரிக்குள் கார் நுழைந்தது. எனது பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன. என்னை அட்மின் பிளாக் முன்பு இறக்கி விட்டார் திரு சுல்தான். உள்ளே எனது உடனடி மேலதிகாரி (திரு செல்லையா, நண்பர் ராமநாதன் சாரின் நெருங்கிய நண்பர், (சற்று கட்டை குட்டையாக கண்ணாடி போட்டு புஷ்டியாக நெற்றியில் விபூதியுடன் இருந்தார், இந்த வேலைக்கு ஏற்பாடு செய்தவர்)  என்னை ஒரு ரூமின் வெளியே வந்து வரவேற்று அறிமுகம் செய்து கொண்டு உள்ளே அழைத்துப் போனார். உள்ளே எழுத்தாளர் ராஜேஷ் குமார் போல சற்று சுருட்டை முடி, மாநிறத்தை விட குறைவு, கூலிங் கிளாஸ் போட்டு (அது பவர் க்ளாஸ் தான் அதிலும் ஸ்டைல்)  அமர்ந்திருந்தார் ஆபரேஷன்ஸ் மேனேஜர் திரு மெய்யழகன் அவர்கள் என்னை முழுவதும் திறக்காத உதடுகளின் புன்னகையோடு 'வெல்கம் மிஸ்டர் பாலா' என்றார். பயணம் பற்றி விசாரித்தார். அதற்குள் காபி வரவைத்து (மூவருக்கும்) கொடுத்தார். பிறகு இன்டர்காமில் பேசி விட்டு என்னை 'வாருங்கள் பாலா, நாம ஜி எம் சாரை  மீட் செய்யலாம் என்றார். அது அதே ஹாலில் பக்கத்தில் இருந்த மிகப்பெரிய அறை. உள்ளே சிகரெட் பிடித்த ஒரு வெள்ளைக்காரர் என்னை உற்றுப் பார்த்து புன்னகைத்தார். 

நான் அவரிடம் கைகுலுக்க எனது கைகளை நீட்டினேன். அவர் எழுந்து நின்றார். அநேகமாக ஏழு அடி உயரமும், நூறு கிலோவிற்கும் மேலான எடையும் இருக்கும். சிறிய கண்கள், வெள்ளையும் சிகப்பும் கலந்து மிக நேர்த்தியாக உடை அணிந்து இருந்த அவர் பெயர் 'சீமர் திசில்வட்டே' (அப்போது நிச்சயம் அங்கே அவர் டேபிளில் எழுதி இருந்ததை, அவர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டதை  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது கண்கள் அவர் எடை உயரம் மீது நின்று போனது. சில நிமிடங்களில் 'உங்களுக்கு ஓபிஎம் எல்லாம் சொல்லுவார் (அதாவது மெய்யழகன் சார்), வெல்கம் டு அலி ஷஹானி, ஆல் த பெஸ்ட்' என்று அனுப்பி வைத்தார். மெய்யழகன் சார் 'செல்லையா, பாலாவின் ரூம் ரெடியா? அங்கே கூப்பிட்டுக் கொண்டு போங்கள், மதியம் நான்கு மணிக்கு மேல் சந்திக்கலாம்' என்றார். அந்த அட்மின் பிளாக் பின்னால் தான் அலுவலர் தங்கும் ரூம்கள் வரிசையாக இருந்தன. அங்கே சுல்தான் எனது பெட்டிகளோடு ஏற்கனவே இருந்தார். 'இது உங்கள் இப்போதைக்கான ரூம், வாருங்கள் நாம சாப்பிடப் போவோம்' என்றார். செல்லையா, 'போய் சாப்பிட்டு விட்டு வந்து ரெஸ்ட் எடுங்கள். நான்கு அல்லது ஐந்து மணிக்கு என்னுடைய கேபின் வாருங்கள்' என்று நகர்ந்தார். கான்டீன் போன பிறகு அங்கே முழுக்க முழுக்க சிக்கன் வாடை வீசியது. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல பேரின் தட்டுகளில் இறந்த கோழிகள் அழாமல் அமர்ந்து இருந்தன கால்களாக, உடம்பாக குழம்பில் மிதந்த படி. 

எனக்கு விறைப்பாக இருந்த சாதம், மூன்று கரண்டி டால், பிறகு சூடாக ஆனால் மிக மிக கெட்டியாக ரோட்டி (தந்தூரி) இரண்டு கொடுத்து விட்டு, தயிர் ஊறுகாய் அங்கே இருக்கிறது என்று சொன்னார் அந்த கான்டீன் பையன். எனக்கு தொண்டைக்கு கீழே எதுவுமே இறங்க மறுத்தது. மிகவும் கஷ்டப்பட்டு பாதி ரோட்டி சாப்பிட்டேன். பிறகு ஊறுகாய் தொட்டுக்கொண்டு கொஞ்சம் டால் சாதம், பிறகு கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டேன். தயிர் ரொம்ப  புளிப்பு (மூளை வரை சென்றது புளிப்பு), ஊறுகாய் தாங்க முடியாத அளவுக்கு உப்பு. என் மனதில் என்னை அறியாத பயம் தொற்றிக் கொண்டது. அம்மா சாப்பாடு, அத்தை சாப்பாடு, எப் டி சி கான்டீன் சாப்பாடு, மாதுங்கா சாப்பாடு என்று எல்லாமே மனதில் வந்து போனது. 'சரி நாம நல்லாவே இங்கே மாட்டிக்கொண்டோம்' என்று முனகினேன். அந்த மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்டது. அங்கே யாருக்கும் தமிழ் புரியவில்லை என்பதால் அதைக் கவனிக்கவில்லை. நிறைய பேர் சிக்கனை கடித்து உருவி ருசித்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்க நகர்ந்து கவுண்டர் போவதை  கவனிக்கத் முடிந்தது.  முழுக்க முழுக்க சைவம் சாப்பிட்டு வளர்ந்த எனக்கு 'இந்த பாழும் வயிற்றுக்கு தானே இத்தனை தூரம் வந்திருக்கிறோம், ஆனால் நம்ம பொழப்பு நாறிப் போய் விடுமோ' என்று தோன்றியது.

என்னை இருக்க சொன்ன ரூமில் குளிர் அதிகமாக இருந்தது. அங்கே இருந்த ரக் எடுத்துப் போர்த்திக் கொண்டேன். என்னை அறியாமல் சற்று தூங்கிப் போனேன். மணியைப் பார்த்தால் ஐந்து. வேறு உடை மாற்றி, முகம் கழுவி பவுடர் போட்டு நேராக செல்லையா சார் கேபின் போனேன். அங்கே நான் சைன் போட வேண்டிய நிறைய காகிதங்கள் அங்கே அவர் டேபிளில் இருந்தது. அப்போது ஆபீஸ் பாய் ஒருவர் ஒரு காகிதத்தை கொண்டு வந்து செல்லையாவிடம் கொடுத்து இது சாருக்கு சற்று முன்பு வந்த டெலெக்ஸ் என்றான். செல்லையா அதனை என்னிடம் கொடுத்தார். "சாவித்திரி பாட்டி எக்ஸ்பயர்ட் திஸ் ஆப்டர்நூன், கால் மீ எனி டைம், முரளி" என்று இருந்தது. எனது முகம் வெளிறியதைப் பார்த்த நண்பர் செல்லையா என் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்து படித்து உச் கொட்டினார். "சார் சென்னைக்கு போன் பேச முடியுமா? ஏதாவது சார்ஜ் உண்டா?" என்றேன். அதற்குள் 'நம்பர் சொல்லுங்கள்' என்றார். கெம்பிளாஸ்ட் முரளி மறுமுனையில் இருந்து உங்க அம்மா அப்பா உன்னை வழியனுப்பி உடனேயே சென்னை வந்து விட்டனர். பாட்டிக்கு ஏற்கனவே கான்செர் இருந்திருக்கிறது. அதனால் அவர் தவறி விட்டார். என்ன நீ வர முடியுமா ? இன்று தானே போய் இருக்கிறாய் ? சரி, ஒரி பண்ணிக்காதே அப்புறம் பேசலாம்" என்று அவனே போனைத் துண்டித்தான். (சாவித்திரி பாட்டி அம்மாவின் அம்மா, வயது 72 இருக்கும் - எத்தனை வம்பு செய்து இருப்பேன் அவர்களோடு - என்ன இது கொடுமை வந்து இறங்கியவுடேனே இப்படி ஒரு செய்தியா ? மனம் தவித்தது)

சாரி பாலா என்று சொல்லி சில ஆபீஸ் பேப்பர்கள் (எல்லாம் நான் சைன் பண்ண) கொடுத்தார் செல்லையா. எனக்கு போனில் சொல்லப்பட்டதை விட சம்பளம் சற்று குறைவாக இருந்ததை கவனித்தேன். அவரே முந்திக் கொண்டார், "உங்களுக்கு 'ஓ டி' தனியாக வரும். அது இங்கே எழுதி இருக்காது" என்றார். (இப்போது ஓமானி ரியால் என்பது இந்தியன் ரூபாய் 150 முதல் 160 வரை மாறிக் கொண்டு இருக்கும் என்றார்) எனது பாஸ்போர்ட்டை ஏர்போர்ட்டிலேயே சுல்தான் சார் வாங்கிக் கொண்டு இருந்தார். அது இப்போது நினைவுக்கு வந்தது. செல்லையா சார் எனது சிறு காபின் டேபிள் சேர் எல்லாம் காட்டினார். அவர் அமர்ந்து இருந்த அதே ஹாலில் என்னைத் தவிர டேவிட், சாம் என்று இருவர் அங்கே இருந்தனர். இருவருக்கும் 25 வயது இருக்கும். சிரிக்க முடியாமல் என்னிடம் அறிமுகம் ஆனார்கள். என்னுடைய லெட்டரில் 'அக்கௌன்டன்ட் கம் சேல்ஸ் அட்மின் ஆபீசர்' என்று எழுதி இருந்தது. 

அதற்குள் மணி எட்டு ஆகி இருந்தது. 'சரி நாளை பார்க்கலாம்' என்றார் செல்லையா. கான்டீன் போனால் அதே போல சப்பாத்தி மற்றும் டால் தான். சற்று மென்மையாக இருந்தது. இருந்தாலும் பாட்டி போன சோகம் மனதைத் தாக்கியது. சாப்பிட வேண்டுமே என்று ஒரு சப்பாத்தி  மற்றும் ஒரு வாழைப்பழம் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விட்டு  எனது ரூமுக்கு வந்தேன். அதற்குள் எனது ரூமில் இன்னும் இரண்டு பேர் இருந்தனர். ரூம் ஏசியில் அப்படிக் குளிராக இருந்தது. ஒருவர் மராத்திக்காரர், ஒருவர் குஜராத்திக் காரர். அவர்களே "நீங்க ரொம்ப டயர்ட் ஆக இருக்கீங்க, தூங்குங்க காலையில் பேசுவோம். ஆனால் ஆபீஸ் காலை எட்டு மணிக்கு என்றார். வேட்டி கட்டிக்கொண்டு படுத்தேன். புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. கண் முன்னர் பாட்டி வந்து வந்து போனார். காலை எழுந்து வேலை தொடங்க வேண்டுமே என்ற கவலையுடன் சற்று கண் அசந்தேன்.
எல்லாவற்றையும் எப்படி இன்றே சொல்ல ...?

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment