Tuesday, July 13, 2021

நீங்கா நினைவலைகள் - 19

 நீங்கா நினைவலைகள் - 19

- பாலசாண்டில்யன் 

மறுநாள் எனது உயர்ந்த புருவம் கீழே இறங்கிட அதிக நேரம் ஆயிற்று. என்னுடைய ரூம் மேட்டில் ஒருவர் எங்கள் நிறுவனத்தின் போபாக் (சீஸ் கார்ன் கர்ல்ஸ்) செய்யும் ஒரு துறையின் ப்ரொடக்ஷன் இன்சார்ஜ். இன்னொருவர் எங்கள் பொட்டாடோ சிப்ஸ் துறையின் இன்சார்ஜ். அடடா எவ்வளவு எளிமையான மனிதர்கள். என்னோடு ஹிந்தியில் தான் பேசினார்கள். என்னைப் பற்றி அவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் (முதல் நாள் வந்து இறங்கியதுமே பாட்டி இறந்த விஷயம், பிறகு கான்டீன் சாப்பாடு பிடிக்காமல் திண்டாடியது உட்பட) அதற்கு அவர்களே நல்ல உபாயமும் தந்தார்கள். அருகே 
ரூவியில் முன்கூட்டியே சொல்லி ஆர்டர் செய்து விட்டால் ( சாப்பாடு கேரியரில் சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், அப்பளம், ஊறுகாய் என்று)  முழு சாப்பாடு  வந்து விடும். ஆனால் அது கொஞ்சம் விலை அதிகம் (ஒரு மாதத்துக்கு எனது மாத வருமானத்தில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு ஆகி விடும்) என்றனர். 

காலை மணி 7.45 இருக்கும். கான்டீன் பக்கம் போன போது பிரெட் பட்டர் ஜாம் அல்லது பிரெட் ஆம்லெட் என்று வைத்து இருந்தனர். நான் பட்டர் ஜாம் வைத்து சாப்பிட்டு விட்டு ஐம்பது ஸ்டெப்ஸ் நடந்து எனது கேபின் வந்து அடைந்தேன். அங்கே நண்பர் செல்லையா, டேவிட், சாம் மூவருமே வந்திருக்கவில்லை. என்னை காண ஸ்டோர்ஸ் இன்சார்ஜ் மாத்தியூஸ் சார், கேஷியர் பணிக்கர் சார் (இருவரும் கேரளா என்று நான் இங்கே சொல்லவும் வேண்டுமோ) வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நானும் தமிழ் கலந்த மலையாளத்தில் அவர்களோடு சம்சாரித்தேன். சற்று நேரத்தில் செல்லையா சார் வந்து என்னை பாக்டரி முழுவதும் சுற்றிப் பார்க்கச் சொல்லி அதற்கு ஒருவரை நியமித்தார். முதலில் போபாக் பேக்டரி (அங்கே என் ரூம் மேட் மோகன் நின்று இருந்தார்) போனேன். மோகன் என்னை அதிவேக சுற்று ஒன்றில் எப்படி சீஸ் பவுடர் மற்றும் மிளகாய் பொடி கலந்து சீஸ் கார்ன் (பொரித்து சீஸ் வாசனையுடன்) வெளியே வந்து தாமாக அளந்து மெஷினில் வரிசையாக பாக்கில் விழுந்து பாக் ஆகி கன்வேயரில் நகர்கிறது என்று விளக்கினார். காலை நேரம் என்பதால் அவர் மிகவும் பிசி. 

அடுத்தது ஜூஸ் செய்யும் பாக்டரிக்குள் நுழைந்தேன். அங்கே ஆரஞ்சு, மற்றும் லெமன் ஜூஸ், தவிர சோடா என்று எல்லாமே பாட்டிலில் எப்படி பாக் ஆகிறது என்பதை விளக்கியது ஒரு பஞ்சாப் கிங் (சாரி சிங்). அவரே மூன்று பாக்டரிக்கும் மெக்கானிக்கல் இன்ச்சார்ஜ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். 

அடுத்து நான் சென்றது சிப்ஸ் பேக்டரி. அங்கும் என் ரூம் மேட் திரு பட் அவர்கள் இருந்தார். சிரித்தபடி வரவேற்று எப்படி உருளை உருண்டு திரண்டு (அது நல்ல கண்கொள்ளா காட்சியாக இருந்தது) வறுபட்டு மசாலாவுடன் கலந்து பிறகு தாமே எடை போட்டு பாக் ஆகிறது என்கிற அற்புதத்தை விளக்கினார். அது மட்டுமா? ஏற்கனவே கொஞ்சம் போபாக் ருசி பார்த்தாகி விட்டது. உருளை சிப்ஸ் செய்யும் இடத்தில் சுண்டி இழுக்கும் அப்படி ஒரு வாசனை. சுட சுட சுவையான சிப்ஸ் எனக்கு டேஸ்டுக்கு தரப்பட்டது. நிச்சயம் நம்ம ஊர் அக்ஷய் குமார் சொல்வது போல ஒன்றோடு அந்த சிப்ஸை நிறுத்தி விட முடியாது. அவ்வளவு ருசி.  நான் முன்னேற்பாடாக ஜூஸ் செய்யும் இடத்தில் மீண்டும் வருகிறேன் என்று சொல்லியதால் அங்கே சென்று ஆரஞ்சு ஜூஸ் ஒரு கிளாஸ் வாங்கி குடித்தேன். அது நம்ம ஊரு கோல்ட் ஸ்பாட் போல இருந்தது, கொஞ்சம் காஸ் கலந்து. 

திரும்பி வரும் பொழுது தான் புரிந்தது நான் பாம்பேயில் ஏற்கனவே பார்த்தது போல இந்தியர்கள் மட்டும் வேலை பார்க்கும் நிறுவனம் இல்லை இது  என்று. ஏனெனில் அங்கே பிலிப்பைன் ஓரிருவர், கொரியன் ஓரிருவர், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தமிழ் என்று பல மொழிகள் பேசுகிற மக்கள் நிறைந்த சர்வதேச நிறுவனம்  என்று நினைத்த பொழுது வியந்து போனேன். ஏற்கனவே ஜி எம் ஒரு பிரிட்டிஷ்காரர், என்னை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வந்தவர் ஒரு பாகிஸ்தானி, முதலாளியோ அந்த ஊரின் அரபிக் பேசுகிற செல்வந்தர். சற்று தள்ளி பாக்டரி ஆபரேட்டர்கள் (அவர்கள் தமிழ், தெலுங்கு, பீகார் மற்றும் உத்திரபிரதேசம் என்று பல ஊரில் இருந்து வந்திருப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது) தங்குமிடம் சென்று பார்த்தேன். சென்னை டு டில்லி 3 டயர் ட்ரெயின் போல இருந்தது. எனக்கு நிச்சயம் முதல் அனுபவம் என்பதால் ஆச்சரியம் தந்தது. 

உணவு நேர இடைவேளை வரும் நேரம். என்னை செல்லையா அவர்கள் அழைத்து எனது நண்பர்கள் திரு ராமநாதன் மற்றும் திரு அழகுராஜா இருவருடனும் பேச வைத்தார். இருவரும் மிக மிக சுருக்கமாக நலம் விசாரித்து இரண்டு நாட்களில் சந்திப்போம் என்றனர். (வெள்ளிக்கிழமை தான் வார விடுமுறை). பிறகு செல்லையா அவர்கள் எனக்கான பணிகளை விவரித்தார். நிறுவனத்தில் இருக்கும் மூன்று பாக்டரி பேமெண்ட் எல்லாமே நான் பார்த்துக் கொள்ள வேண்டும், தவிர அனைவருக்கும் பேரோல், அடுத்தது நிறுவனப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சேல்ஸ் வண்டிகளை (ஒவ்வொரு வண்டியிலும் டிரைவர் கம் சேல்ஸ்மேன் அவரது உதவியாளர் - பில் போட, பொருள் இறக்கி கடைகளுக்கு சப்ளை செய்ய) சூப்பர்வைஸ் செய்வது என்றார். 

அதற்குள் மதிய நேரம் என்பதால் எனது ரூமுக்கு கிளம்பினேன் (அந்த சவுத் இந்தியன் சாப்பாடு கேரியர் ஏற்கனவே வந்து ரூம் வாசற்படியில் இருந்தது). பிரித்தவுடனேயே நல்ல மணம், சூடு வேறு. ஆனால் தெரிந்து விட்டது இது என் ஒருவனால் முடிக்க முடியாது என்று. ரூமுக்கு வந்த மோகன் சாரை சாப்பிட அழைத்தேன். அவர் தனக்கு அசைவ உணவு வேண்டும் என்று நாசூக்காக மறுத்தார். பிறகு பட் சார் வந்தார். அவரை அழைத்தேன். அவர் மறுப்பு சொல்லாமல் (உங்களுக்கே சரியாக இருக்கும் என்று சொல்லி முதலில் மறுத்தார், நான் அவருக்கு அழுத்தம் தர சம்மதம் சொன்னார்) என்னுடன் வந்து உட்கார்ந்தார். வாழை இலை போட்டு சாப்பாடு. கல்யாண சாப்பாடு. 

நாங்கள் இருவரும் சாப்பிட்ட பிறகும் அவர்கள் அனுப்பியது எல்லாமே மீதம் இருந்தது. தினமுமே என்னுடன் இணைகிறாரா என்று பட் சாரைக் கேட்டேன். அவர் 'தனக்கு தினம் இவ்வளவு ஹெவி சாப்பாடு பிடிக்காது, தவிர சப்பாத்தி,முட்டை, மீன்  அல்லது சிக்கன் நிச்சயம் தேவை என்றார். இப்போது நல்ல சாப்பாடு இருக்கிறது. ஆனால் வீண் ஆகிறது. ரொம்ப செலவாகிறது. மாத்தியூஸ் சாரிடம் கேட்டு யாராவது என்னுடன் ஷேர் செய்வார்களா என்று விசாரிக்க அடுத்த ரூமில் இருந்த அவர் ரூமுக்கு சென்றேன். அவரோ "யாரும் என்னுடன் அந்த சுத்த சைவ சாப்பாடு சாப்பிடுவோர் இல்லை" என்று கைவிரித்தார். 

மாலை நான்கு மணிக்கு முன்பே எனது கேபின் சென்று லைட் மற்றும் ஏசி ஆன் செய்தேன். (காலை எட்டு மணி முதல் இரவு எட்டு வரையான ஆபீஸ் - உணவு இடைவேளை மதியம் ஒன்று முதல் நான்கு வரை - காரணம் அந்த ஊர் மிகவும் வெயில் அதிகம் - வெள்ளி வார விடுமுறை). செல்லையா வந்து "இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் பாலா, நீங்கள் கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் என்பதால் நீங்கள் வந்ததும் தான் கம்பெனி அக்கவுண்ட்ஸ் மற்றும் சேல்ஸ் விஷயங்களை நீங்கள் தான் கம்ப்யூட்டரைஸ் செய்து தர வேண்டும். நாம் அடுத்த வாரமே கம்ப்யூட்டர், டேபிள், சேர் மற்றும் பிரிண்டர் எல்லாமே வாங்கி விடலாம். ஏற்கனவே கொட்டேஷன் வாங்கி அப்ரூவ் ஆகி ரெடியாக இருக்கிறது. தவிர, அந்த நிறுவனத்தில் எல்லோருமே நம்ம தமிழ்காரர்கள். அவர்களே சாப்ட்வேர் கொடுத்து உங்களுக்கு ஓரிரு நாட்கள் ட்ரெயினிங் தந்து விடுவார்கள்" என்றார். (அடப்பாவி என்னுடைய ஒரு மாத சம்பளத்தில் சுமார் மூன்று பேர் வேலையை வாங்க ரெடிமேட் திட்டம் தீட்டி விட்டீர்களா ? சரி அதையும் பார்ப்போம்). நான் சிரித்தபடி "நோ ப்ரோப்லேம் சார். எல்லாம் செய்து விடலாம்" என்று சொன்னேன்.

எம் டி திடீர் திடீர் என்று பேக்டரி வருவார் என்று அறிந்து கொண்டேன். ஆனால் எங்கள் கேபின் கிட்டத்தட்ட மெயின் கேட் அருகே என்பதால் அவரின் கார் ஹார்ன் சத்தம் பரிச்சயமாக இருந்தபடியால் ஏற்கனவே பம்பரமாக வேலை பார்க்கும் நபர்களை மேலும் முறுக்கி விட்டது  என்பதையும்  பார்த்தேன். எம் டி வந்தாலே அவருடன் சேர்ந்து நடந்து போய் விளக்குவது ஓ பி எம் (அதான் நம்ம மெய்யழகன் சார்). அவர் கிளம்பும் முன்பு ஜி எம் ரூமுக்கு போய் சிறிது நேரம் அமர்ந்து விட்டு கிளம்பி விடுவார். அந்த சில நிமிடங்கள் அதிரடி மழை பெய்து ஓய்ந்தது போல இருக்கும் என்பதை உணர்ந்தேன்.  எம் டி நல்ல உயரம், கம்பீரமான நடை, அந்த ஊர் ஷேக் (ராஜா) போல நல்ல வெள்ளை நிறத்தில் முழு ஆடை, தலையில் கருப்பு நிறத்தில் முண்டாசு போன்ற ஒன்று. 

அதற்குள் வியாழன் முடிந்தது.  செல்லையா சார் எனது பாஸ் என்ற நிலை மாறி ஒரு நண்பராக மாறினார். (அவர் நிலைமை அப்படி). எனக்கு அவர் எனக்கு முன்பே பரிச்சயம் கிடையாது. திரு ராமநாதன் சாரின் நல்ல நண்பர், அவ்வளவே.  அன்று இரவே ஒரு டாக்சி வைத்துக் கொண்டு ரூவியில் இருந்த ராமநாதன் சார் ரூமுக்கு போகப்போவதை சொல்லி இருந்தார். வெள்ளி எல்லோருமே அங்கே தான் தங்குவோம். இரவு தான் ரிட்டர்ன் என்றும் சொல்லி இருந்தார். நான் எனது இரவு ட்ரெஸ், மறுநாள் ட்ரெஸ் என்று எல்லாம் எடுத்துக் கொண்டு மிகவும் ஆவலாக ராமநாதன் சார் ரூமுக்கு செல்லையா சாருடன் போனேன். அங்கே இரவு சாப்பாடு, பேச்சு அரட்டை, பிறகு 'மோகன் நடித்த குங்குமச்சிமிழ்' படம் என்று ரெடி செய்து இருந்தனர் (நிலவு தூங்கும் நேரம் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்). வேறு சில நண்பர்கள் வேறு வந்து சேர்ந்தனர். சுமார் வெளிச்சம் சுமார் இருட்டு என்று அவர் வீடு மாறியது. அருமையாக படம் முடிந்ததும் அப்படி அப்படியே அவரவர் உட்கார்ந்த இடத்தில் கட்டய சாய்ச்சு தூங்கிப் போனோம். கையில் கிடைத்த லுங்கி போர்வை என்று எடுத்துப் போர்த்திக்கொண்டேன்.

மறுநாள் தாமதமாகத் தான் தொடங்கியது. ராமநாதன் மட்டும் எனது வேலை பற்றி மிக அக்கறையாக விசாரித்தார். ஒருவர் டீ போட, ஒருவர் பிரெட் ரெடி பண்ண (அதற்குள்  சிலர் கிளம்பி இருந்தனர்).  அப்போதுஅன்றைய அஜெண்டா வெளியானது. மதிய உணவு வெளியில் வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு  என்னைக் கூப்பிட்டுக் கொண்டு ரூவி மார்க்கெட் போவது, பிறகு அங்கிருந்த சிவன் கோவில், மாலை பாக் டு வாடிகபீர் பாக்டரி குவாட்டர்ஸ் என்று. மனம் என்னை அறியாமல் உற்சாகத்தில் துள்ளியது.  

அடுத்த இரண்டு அத்தியாயங்கள் நிச்சயம் உங்களை ஒன்றிட வைக்கும் சம்பவங்கள் நிச்சயம் உண்டு. வாசிக்கத் தவறாதீர்கள்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment