Wednesday, July 14, 2021

நீங்கா நினைவலைகள் - 20

 நீங்கா நினைவலைகள் - 20

- பாலசாண்டில்யன் 

நீங்கா நினைவலைகள் எனும் எனது இந்தத் தொடர் தொடங்கி இன்று 20 நாட்கள் கடந்து விட்டது. இந்த தொடரோடும் எனது நினைவுகளோடும் தொடர்ந்து பயணிக்கும் எனது முகநூல் நண்பர்களுக்கும் (இதில் பல பிரபல எழுத்தாளர்கள், முக்கிய பிரமுகர்களும் உண்டு) எனது ப்ளாகில் வாசிக்கும் நேயர்களுக்கும் இந்த நேரத்தில் தருகின்ற ஊக்கத்திற்கு ஆதரவிற்கு நல்ல கருத்து பின்னூட்டங்கள் தருவதற்கும் எனது மனப்பூர்வமான பணிவன்பு கலந்த நன்றியை தெரிவிக்கிறேன்.  

ரூவி மார்க்கெட் மிகவும் ஆச்சரியம் மிகுந்தது.  எல்லோரும் நம்ம தி நகர் கடைகள் போல கடை கடையாக ஏறி இறங்கி இஷ்டம் போல பொருள் வாங்குவதைப் பார்க்க முடிந்தது. எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும் என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு சின்ன டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தனர். அதில் காசெட் போட்டு பாட்டு கேட்கலாம். பிறகு எப் எம் ரேடியோவும் இருந்தது. பிறகு சிவன் கோவில் போனோம். மிக அருமையாக கட்டி இருந்தனர் அங்கே பல ஆண்டுகளாக தங்க வைர வியாபாரம் செய்யும் இந்தியர்கள் (குஜராத்தியர்)  அதனை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணம் செய்து இருந்தனர். அப்போது சிருங்கேரி சங்கராச்சாரியார் சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது. (பின்னாளில் அங்கே ஒரு கிருஷ்ணர் கோவிலும் வந்ததாக அறிகிறேன்.) கோவிலை நான் ஒரு பிரதட்சிணம் வரும் போது என் கண்ணில் பட்டார் ஒரு நண்பர். (இப்படி யாராவது தெரிந்தவர் கண்ணில் மாட்டுவது எனக்குப் புதிதல்ல). அவர் மேற்கு மாம்பலத்தை சார்ந்தவர். நான் படித்த ஆண்டில் ஏ எம் ஜெயின் கல்லூரியில் பி எஸ் சி படித்த ராமச்சந்திரன் என்ற கோபி. நான் அவரை 'கோபி' என்று கூப்பிட்டதும் அவர் அசந்து போனார். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. சற்று குண்டாகி இருந்தார்.

ஓரிரு நிமிடங்களில் அவர் சுஹைல் அண்ட் சவுத் பவன் எனும் (அநேகமாக எல்லா தமிழர்களும் பெரிய அல்லது  நடுத்தர பதவிகளில் வேலை பார்க்கும் நிறுவனமாக அது இருந்தது) நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக சொன்னார். அடுத்த வியாழன் இரவு அவரது கெஸ்ட்டாக உணவு சாப்பிட அழைப்பு விடுத்தார். அவர்கள் நிறுவனத்தில் அப்படி கெஸ்ட்டை அழைத்து வர அனுமதி இருந்தது. அவர்களின் சாப்பாடும் வேற லெவல்.

அழைத்தால் யார் தான் விடுவார்கள்? அடுத்த வாரமே வியாழன் இரவு அவர் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் போனேன். (அவர்கள் எல்லா பூஜைப் பொருட்களும் சென்னையில் இருந்து வரவழைத்து ஐயப்ப பூஜை எல்லாம் நடத்துவார்கள் என்று அறிந்தேன்.  அவருடைய ரூம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.) அடுத்து நேரடியாக கிச்சன் அட்டாச்ட் டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார். அன்று அடை அவியல், மற்றும் தயிர் சாதம் மாங்காய் தொக்கு, தவிர பிரூட் சாலட். "மாமா நல்ல முறுவலாக இருக்கட்டும்" என்றார் கோபி.. அசத்தல் டேஸ்ட். அங்கே சமையல் செய்தவரும் மாம்பலம் தான் என்றார். கும்பகோணத்தில் வந்து செட்டில் ஆகி இப்போது மஸ்கட்டில் பலரின் நாக்கை அடக்க முடியாது செய்து வருபவர் அவரே என்று கண்கூடாக பார்த்தேன். சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு கோபியிடம் இருந்த சில காஸெட்கள் (மகாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா, கே வி நாராயணசாமி கச்சேரிகள்) வாங்கிக் கொண்டு ராமநாதன் சார் இருப்பிடம் போனேன். அன்று இரவும் முரளி நடித்த ஒரு தமிழ் படம் ரெடியாக இருந்தது.

கோபி இடத்திற்கு மொத்தத்தில் ஒரு நான்கைந்து முறை போய் இருப்பேன். அவனை ஒரு முறை கூட எங்கள் இடத்திற்கு அழைக்கவில்லை. மாறாக எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் சிலவற்றை மாத்தியூஸ் சாரிடம் கேட்டு வாங்கி கொண்டு போய் கொடுத்தேன். ஆனால் இந்த ரூவி மார்க்கெட் போவது என்பது ஒரு வெள்ளிக்கிழமை விரதம் போல் ஆனது. ஒரு பெரிய சாம்சனைட் பெட்டி (குட்டி யானை என்று அழைக்கப்படும் அது இன்றும் வீட்டுப் பரணையில் தூங்குகிறது), பிறகு நிகான் எல் 35 கேமரா, சின்ன அயன் பாக்ஸ், சில பல லேடீஸ் குடைகள், சீமன்ஸ் ஹேர் ட்ரையர், சில சென்ட் பாட்டில்கள், எனக்கு ஒரு குட்டி மைனர் செயின், என் தங்கைக்கு U என்று போட்ட டாலர் இப்படி வாரா வாரம் வாங்கும் பொருட்கள் குட்டி யானை வயிற்றுக்குள் சேரத் தொடங்கியது. 

வீட்டுக்கு பணம் சில சமயம் பாங்க் மூலம் அனுப்பினேன். இரண்டு மூன்று முறை ஹவாலா மூலம் (கொஞ்சம் பணம் கூட கிடைக்கும்) காஷாக வீட்டுக்கு லோக்கல் மக்கள் மூலம் கொண்டு கொடுக்கும் வகையில் அனுப்பினேன். வாங்கிய சில பொருட்களை சொந்த ஊருக்கு சென்ற ஒருவர் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினேன். அங்கே மஸ்கட்டில் சென்ற பிறகும் நான் நிறைய கவிதைகள் எழுதினேன். குறிப்பாக எனது முதல் இசைப்பாடல் காஞ்சி மகாபெரியவர் மீது எழுதினேன். அது புரந்தரதாஸரின் 'கதய கதய மாதவம்' என்ற பாடலின் ஸ்வரஸ்தானத்தில் எழுதப்பட்ட ஒன்று. ராகம் பூர்விகல்யாணி. பல்லவியில் "சரணம் சரணம் குருவே தாள் பணிந்து சரணம் சரணம்" என்று வரும் பாடல் அது. அந்த பாடலையும் ஒரு கேசட்டில் நானே பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தேன்.

எங்கள் சென்னை ஜெய்சங்கர் வீட்டுக்கு எதேச்சையாக  எனது பாம்பே தோழி கல்யாணி சங்கர் சென்று இருக்கிறார். அவரிடம் நான் அனுப்பிய பாடலைக் கொடுத்து சரி செய்து வாங்கினார் என் அம்மா. அந்த செய்தியை ஒரு நாள் போனில் பேசும் பொழுது சொன்னார். அப்போது  வீட்டில் போன் கிடையாது. பி பி போன் தான். கீழ் வீட்டில் இருந்தது. (பிறகு நான் காஞ்சிபுரம் நேரில் சென்று பெரியவா முன்னால் அந்தப் பாடலை பாடி ஆசி பெற்றேன் என்பது மனதில் இருந்து நீங்காத நினைவு என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்).

அலுவலகத்தில் எனக்கு மதியம் வரத் தொடங்கிய அந்த கல்யாண சாப்பாட்டை நிறுத்தினேன். ஒரு வாரம் தான் ஓடியது. காரணம் அது மிகவும் விலை அதிகம், அளவும் அதிகம். நாம் அங்கே போனதே சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பத் தானே ஒழிய, சாப்பிட்டு செலவு செய்து முடிக்க அல்ல என்று மனம் கூறியது.  

பாக்டரி பின்புறம் ஒரு புதிய கட்டிடத்தை நிறுவனம் வாடகைக்கு எடுத்து நான், டேவிட் (என்கிற டிசௌசா) சாம் மற்றும் ஆர் அண்ட் டி பிரிவின் இளம் விஞ்ஞானி நாயக் ஆகியோரை அங்கே போகச் சொன்னார்கள். அது மிக மிக நேர்த்தியாக இருந்தது. புதிய கட்டில், புதிய மெத்தை, சிறு கிச்சன், காமன் டிவி ஒன்று என்று வசதியாக இருந்தது. மெயின் ரோட்டைக் கடந்தால்  எதிரில் தான் நண்பர் செல்லையா அவர்களின் வீடு. அவர் வீட்டுக்கு கீழே ஒரு குட்டி சூப்பர் மார்க்கெட். காலை காபி எனது ரூமில். வழக்கம் போல பிரெட் ஆபீஸ் கேன்டீனில், மதிய சாப்பாடு சில சமயம் நாயக் கைவண்ணத்தில், நாயக் ஒரு மங்களூர் அழகன். நன்றாக கீபோர்டு வாசிப்பான். ஆனால் பிராமிஸ் செய்தது போல கடைசி வரை எனக்கு சொல்லித்தரவில்லை. சில சமயம் கேன்டீனில் எனக்காக ஸ்பெஷல் ஆக செய்து இருந்த புல்கா (சாப்ட் ரோட்டி) மற்றும் டால், தயிர் சாதம் ஊறுகாய், மற்றும் வாழைப்பழம். (எல்லாமே எனக்காக மாத்தியூஸ் சார் உபயம்).

இரவு உணவு செல்லையா சார் வீட்டில். அங்கே தோசை ஊற்றுவது, புளி இல்லாமல் தக்காளி ரசம் செய்வது (எல்லாம் பாம்பே அத்தை டியூஷன்), தயிர் சாதம் செய்வது (அதில் மாதுளை, முந்திரி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் என்று என் கையில் கிடைத்ததை போடுவேன் - அது செல்லையா சாரின் மிகவும் பிடித்த உணவாக இருந்தது), ஊறுகாய் கீழே கடையில் வாங்கிக் கொள்ளுவோம். சார் ஒரு போதும் வீட்டில் ஆபீஸ் விஷயங்கள் பற்றிப் பேச மாட்டார். அவரை பாட்டு கேட்கச் சொல்லி சில சமயம் மாற்றுவேன். அவர் என்னைப் போலவே இளையராஜா ரசிகன். இந்த விஷயங்கள் எல்லாமே (அதாவது ஆபீஸ் வேலை தவிர - சொல்லுகிறேன் ) மிகவும் நன்றாகத் தான் போனது. 

ஆபீஸில் கம்ப்யூட்டர் வாங்கும் படலம். நான் ஆபிஸ் வண்டியில் தனியாக ரூவி போனேன். எனக்குப் பிடித்த டேபிள், சேர், கம்ப்யூட்டர், பிரிண்டர், அதற்கான ஸ்டேஷனரி என்று எல்லாமே வாங்கினேன். அங்கே இருந்த விஜி (விஜயராகவன்) மற்றும் சி எம் எல் நாராயணன் மிகவும் நட்பானார்கள். இருவரும் சென்னை தான். நாராயணின் மகன் என் சித்தப்பா பையன் படிக்கும் வேங்கட சுப்பையா பள்ளியில் படிப்பதாக சொன்னார். அவர் சுமார் 20 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதாக சொன்னார். (இன்றும் சென்னை அசோக் நகரில் செட்டில் ஆகி உள்ள அவரை - சற்று உடல் தளர்ந்து  வாக்கிங் போகும் அவரை  நிறுத்தி  குசலம் விசாரிப்பேன்). 

மாலையே விஜி எங்கள் ஆபீஸ் வந்து எல்லாமே செட் செய்து விட்டார். ஷார்ட்லான்ட்ஸ் (இது யூ கே மாடல் - நம்ம டாலி போல) சாப்ட்வேர் பற்றி மிக எளிதாக சொல்லிக் கொடுத்தார். அதற்கு புத்தகம் தந்தார். பிறகு சேல்ஸுக்கு அவர்களே லோக்கலாக டெவெலப் செய்த சாப்ட்வேர் அப்லோட் செய்து  அது பற்றியும் எனக்கு ட்ரெயினிங் கொடுத்தார். பிரிண்ட் எடுப்பது பற்றியும், பேப்பர் மாற்றுவது பற்றியும் சொல்லித் தந்தார். செல்லையா சாருக்கு கம்ப்யூட்டர் மிகவும் புதிது (அவருக்கு மட்டுமா ஓ பி எம் சார் மற்றும் ஜி எம் சாருக்கும் தான்). செல்லையா ஆன வரைக்கும் சொல்லிப் பார்த்தார் டேவிட் மற்றும் சாமிடம் "நீங்களும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள், உபயோகமாக இருக்கும்" என்று. அவர்கள் 'இந்த பாலா அதற்குத்  தானே வந்திருக்கிறான், நாங்கள் எதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இருவரும் அடிக்கடி (அவர்கள் பாம்பே காரர்கள்) மராத்தியில் பேசி என்னையும் செல்லையாவையும் கலாய்த்து பேசுவார்கள். ஆனால் எனக்கு மராத்தி புரியும் என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பொறாமை சில நேரம் என் காதில் புகையும், விரியும் அது சூடாக. டேவிட் அவனது கண்ணாடி இடுக்கு வழியாக எப்போதும் பிரதாப் போத்தன் போலப் பார்ப்பான். நிச்சயம் அது இரிடேடிங் ஆக இருக்கும். 

ஆரம்பித்தது தலைவலி. ஜி எம், ஓபிஎம் சாரை கேட்க, ஓபிஎம் சார் செல்லையா சாரை கேட்க எனக்கு அழுத்தம் தொடங்கியது. எதற்கு என்கிறீர்களா? கம்ப்யூட்டர் வந்து விட்டதே ! அவர்களுக்கு ரிப்போர்ட் வேண்டுமாம். டைலி, வீக்லி, மன்த்லி, குவாட்டர்லி என்று. நான் கீழ் ஸ்வரத்தில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயி வரை விளக்கி சொன்னேன். "சார் நம்ம ரெகார்டஸ் என்டர் செய்த பிறகு தான் ரிப்போர்ட் எடுக்க முடியும்" என்று. (கார்பேஜ் இன் கார்பேஜ் அவுட் - கிகோ என்று சொல்லுவார்கள்) அவர்கள் விஜி சாரை அழைத்து செலவழித்த பணம் தண்டம் என்று கண்டமேனிக்கு பேசினார்கள் போலும். அவர் எனக்கு போன் செய்து என்ன பிரச்சனை என்று கேட்க, நான் மறுபுறம் புலம்ப, மீண்டும் அவர் பாலா சொல்லுவது சரி, நீங்கள் அவருக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என்றார். இந்த தமிழ்க்காரர்கள் ஒன்று சேர்ந்து நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் என்று அவர்கள் நினைப்பு இருந்தது. அவர்களுக்கு இப்போது நம்பிக்கை தர வேண்டியது நான் தான். 

நானே ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து வேலை பார்த்து (எனது உணவு நேர இடைவேளையைக் கூட குறைத்துக் கொண்டேன்) முதலில் வார ரிப்போர்ட் தந்தேன். பிறகு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை செய்து ரெகார்ட்ஸ் எல்லாம் என்ட்ரி செய்ய மிகவும் சிரமப்பட்டேன். (எனக்கு தனியாக ஓ டி கிடைத்தது என்றாலும், உடலும் மனமும் மிகவும் தளர்ந்து போனது, சில நேரம் என்னை அறியாமல் களைத்துப் போனேன்.). இது தவிர என்னுடைய ஏற்கனவே இருக்கும் அக்கௌன்ட்ஸ் வேலை வேற இருந்தது. எனது  குவாட்டர்லி ரிப்போர்ட் ஜி எம் பார்த்துவிட்டு என்னை தனியாக அழைத்து என் தோளில் தட்டி 
பாராட்டினார். சில நேரம் நான் லேட்டாக வேலை செய்வதைப் பார்த்து என் கேபின் உள்ளே வந்து 'யூ ஆர் ஸ்டில் ஹியர்' என்று கேட்டிருக்கிறார். எனக்கு மனதுக்கு புது தெம்பு வந்தது. என் ரிப்போர்ட் எம் டி வரைக்கும் போனது. செல்லையா சாரும் என்னை ரொம்ப பாராட்டினார். ஏன் என்றால் நான் நல்ல பெயர் எடுத்தால் தான் என்னைக்  கூட்டிக்கொண்டு செல்லையா சாருக்கு நல்ல பேர். உதவிக்கு வந்த விஜி சாருக்கும் போன் செய்து நன்றி சொன்னேன். 

இப்போது அடுத்த தலைவலி, சேல்ஸ் ரிப்போர்ட்டில் நிறைய பணம் (வராமல் தங்கி இருந்தது, சில இடங்களில் சேல்ஸ் குறைந்து இருந்தது, சில சேல்ஸ்மேன்/டிரைவர் டீசல் போடும் போது பணம் அடிக்கும் விவகாரம் எல்லாமே புற்றீசல் போல வெளியே வந்தது). இதற்கு என்னை இன்டெர்னல் ஆடிட்டர் போல போடலாம் என்று முடிவானது. (யப்பா நான் எப்படியோ ஆடிட்டர் ஆகப் போகிறேன்). 

இந்த டீசல் ஊழல் விவகாரங்கள் பற்றி கண்டுபிடிக்க நான் காலை ஆறு மணிக்கே முதலில் புறப்படும் வண்டியில் ஏறி எங்கள் நிறுவன வண்டிகள் வழக்கமாக டீசல் பெட்ரோல் போடும் பங்குக்கு போக வேண்டும். துப்பறியும் சாம்புவாக மாறி அங்கே வரும் ஒவ்வொரு வண்டியின் எண், அவர்கள் எவ்வளவு டீசல் நிரப்புகிறார்கள். அவர்களின் வண்டியில் என்ன கிலோமீட்டர் காட்டுகிறது என்று எல்லாமே குறித்துக் கொள்ள வேண்டும். சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் அந்த வேலை முடிய. அப்போது வெயில் தொடங்கி விடும். வேலை முடிந்ததும் என்னை அழைத்துப் போக தனி வண்டி ஒன்று வரும். அப்படி போகும் நாட்களில் நான் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆபீஸ் வரலாம். காலையில் செல்லுவதற்கு எனக்கு தனியாக ஸ்பெஷல் ஓ டி வேறு உண்டு என்று சொல்லப்பட்டது. அங்கே அநேகமாக பலர் பிடிபட்டனர். சில சேல்ஸ்மேன்கள் என்னை ஒரு வில்லனைப் பார்ப்பது போல பார்த்தனர். ஒருவர் சொல்லவே சொன்னார், "நீ பார்க்கத் தான் சிறியவன், சாது ஆனால் பரம கில்லாடி". கணிசமான தொகை மிச்சம் ஆகும் படி இருந்தது என்னுடைய இந்த வேலையினால். பிறகு நான் ஒருவனே கஷ்டப்படக் கூடாது என்று டேவிட் மற்றும் சாம் இருவரும் கூட ஒரு வாரம் மாற்றி மாற்றி பெட்ரோல் பங்க் போக வேண்டும் என்றும் முடிவானது. 

இன்னும் த்ரில்லிங் விஷயங்கள் உண்டு. நிச்சயம் சொல்லுவேன்.  

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

1 comment: