Monday, July 12, 2021

நீங்கா நினைவலைகள் - 17

 நீங்கா நினைவலைகள் - 17

- பாலசாண்டில்யன் 

பாம்பே என்று சொல்லும் போது இந்த விஷயத்தை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? ஒன்று தாதர் ஸ்டேஷன் அருகில் நாக்கு புண்ணாகும்  அளவிற்கு சூடாக சுவையாக இருக்கும் ஆலு வடா (உருளை போண்டா) உப்பில் ஊறிய நீளமான பச்சை மிளகாயுடன், இரண்டு நம்ம ஊர் போல இல்லாமல் அங்கே கிடைக்கும் ஆனந்தமான பானி பூரி (ஒன்று ஒன்றாக நாம் திங்கத் திங்க நம் தட்டில் வைப்பார் பாருங்கள்...அடடா), அதே போல அந்த பாடிஸ் சன்னா, இன்னொன்று அந்த எலுமிச்சை இஞ்சி போட்டுப் பிழிந்த கன்னா பானி (கரும்பு ஜூஸ்) - அதுவும் பெரிய கிளாஸ் என்றால் அமிதாப் பச்சன் சிறியது என்றால் ஜெயபாதுரி. தவிர, காலை முதல் நள்ளிரவில் கூட கிடைக்கும் அதிருசியான இரானி கடை டீ (நிறைய தெருக்களில் அந்த மூலையில் இருக்கும் கடை அது தான் - கேரளாகாரர்கள் போட்டுத் தரும் டீ - அதில் மசாலா இஞ்சி இதெல்லாம் இருக்காது). அவற்றை எல்லாம் தூக்கி அடிக்கும் ஒரு டீக்கடை (பெரும்பாலும் பீகார் அல்லது உபிகாரர்கள் நடத்தும் டீ கடை) அங்கே அமதவாதி, பனாரசி, மசாலா, ஏலக்காய், இஞ்சி என்று விதவிதமான டீ, ஒவ்வொன்றும் ஒரு விலையில். எல்லா கடையிலும் சிவன் படம் நிச்சயம் இருக்கும். மிக அழகான மராத்தி கலக்காத ஹிந்தி பேசுகிற மக்கள் இருக்கும் இடம்.

அய்யோ, நிச்சயம் இந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை இங்கே நான் சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் என்னை நீங்கள் ஒரு வேளை ரொம்ப புத்திசாலியோ அல்லது கிரேட் என்று கூட நினைக்கக்கூடும். FDC ல் சாப்பாடு நேரம் 1 முதல் 1.30 வரை தான். நான், ஹரிஹரன், பிரபாகரன் மற்றும் வைத்தி ஆகியோர் ஒன்றாக சாப்பிடுவோம். எங்களுக்கு கேன்டீனில் சாப்பாடு உடனே கொடுத்து விடுவார்கள். உட்காரும் இடமும் எங்களுக்கு பிக்சட். தான். சாப்பிட்ட பிறகு அட்மின் பில்டிங் அருகே நல்லதொரு கிரீன் லான் இருக்கும். நாங்கள் அங்கே சென்று அமர்ந்து அல்லது அப்படியே சாய்ந்து உட்கார்ந்து (சில நேரம் ஸ்ரீரங்க பெருமாள் கோலத்தில்) அரட்டை (அதாவது பெரிய லெவல் பேச்சு) அடிப்போம். வம்பு தும்புகள் அதில் கலந்து இருக்கும்.

அப்படி ஒரு நாள், பிரபாகர் திடீர் என்று "இந்த வருடம் குடை அலவன்ஸ் முப்பது ரூபாய் எல்லோருக்கும் தந்து விட்டார்கள்" என்றான் சம்பந்தம் இல்லாமல். உடனே நான் "தலைவரே எனக்கு வரவில்லையே" என்றேன். "விடுறா பாலா கொடுக்கச் சொல்றேன், நீ எங்கியாவது ஆபீஸ் வேலையா போய் இருந்திருப்பே" என்றான்.

மதியம் ஒரு மூன்றரை மணி இருக்கும். ஜி எம் பிரபு சார் ரூமில் இருந்து பெரிய பெரிய சத்தங்கள். கேல்கர், நாயக் எல்லோரும் உள்ளே இருந்து வெளியே வெளியே இருந்து உள்ளே என்று பல பைல்களை எடுத்துக் கொண்டு ஓடியதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே யூனியன் தலைகள் இரண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்ததையும் பார்த்த நினைவு. திடீர் என்று பியூன் வந்து என்னிடம் "பாலா சார் உங்களை ஜி எம் கூப்பிடுகிறார்" என்றார். எனக்கு வயிற்றில் புளி கரைத்தது. உள்ளே போன என் கண்ணில் சிங்கத்தை போல முகம்  சிம்ம கர்ஜனை செய்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் "ஹே பாலா உனக்கு அம்பிரெல்லா அலவன்ஸ் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார். நான் சூழல் புரியாமல் (இவருக்கு எப்படித் தெரியும் - டேய் பிரபாகர் இப்படி டபுள் கேம் ஆடி விட்டாயே என்று மனதில் புலம்பிய படி) "எஸ் சார் கிடைக்கவில்லை" என்று வார்த்தையை சொல்லி முழுங்கி சுற்றுமுற்றும் திருடன் போல பார்த்து திருதிருவென்று முழித்தேன். 

"கெட் அவுட், ஐ டோன்ட் வாண்ட் டு சி யு" என்றார். அவர் முகம் மேலும் சிவந்து கிடந்தது. இது போல நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் குரல் ரூமை விட்டு ஹாலில் எல்லாம் எதிரொலித்தது. எனக்கு கால் எல்லாம் உள்நடுக்கம் கொண்டு நடுங்கியது. நாயக்கிடம் "சீ ஹவ் யுவர் பாலா ஹாஸ் ஸ்பாயில்ட் எவெரிதிங்". என்றார். அப்போது தான் அந்த யூனியன் லீடர் (ஏற்கனவே சொன்னதை) மீண்டும் சொல்லி கொக்கரித்தான்,  "நான் சொன்னது சரி தானே, ஜெ எம் டி செகரட்டரிக்கே பாலாவுக்கே கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கு எப்படி நேரத்தில் கிடைக்கும்". 

வெளியே வெளிறிய முகத்துடன் மெதுவாக வந்து என் சீட்டில் உட்கார்ந்தேன். எனக்கு நிச்சயம் ஒன்றுமே புரியவில்லை. என்னை பிரபாகர், வர்ஷா, எலிசபெத், ஹரி எல்லோரும் பாவமாக பார்த்தனர். வைத்தி எனக்கு குடிக்க ஒரு க்ளாஸ் தண்ணி கொடுத்தான். சற்று நேரத்தில் என் தோளில் தட்டி தனது ரூமுக்கு அழைத்தார் நாயக். "டேய் நீ மதியம் லானில் பேசும் போது உன் பின்னால் யூனியன் லீடர் நின்று கொண்டிருந்தது கவனிக்கவில்லையா ? ஏண்டா இப்படி சொதப்பி விட்டாய், உன் மீது இருக்கும் கோபம் குறைய பல நாட்கள் ஆகும். நான் வேறு வேலையை விட்டு வெளிநாடு கிளம்புகிறேன், ஐ ஆம் வெரி மச்  டிஸ்அப்பொய்ன்டெட் மை பிரென்ட்"  என்று மீண்டும் என் தோளில் தட்டி போகச் சொன்னார்.

அடுத்த ரெண்டு நாளில் நான் சென்னை செல்ல பத்து நாள் லீவ் அப்ளை செய்து இருந்தேன். அதன் படி நான் கிளம்பி விட்டேன். ஊருக்குப் போயும் நார்மலாக இருக்க முடியவில்லை. இதை எல்லாம் யாரிடம் சொல்லுவது? அங்கே சேகருக்கு மட்டும் போனில் சொன்னேன். 'எல்லாம் சரியாகி விடும் ..இதெல்லாம் பார்ட் ஆப் ஆபீஸ் பாலிடிக்ஸ், உனக்கு தான் புதுசு, இன்னும் நிறைய பார்ப்பே' என்றான். அவன் சேல்ஸ் லைன் என்பதால் இது போல தினம் தினம் பார்த்திருக்கிறான். சிலவற்றை என்னிடம் சொல்லுவான். அதனால் அவன் சில வேலைகளை கூட மாற்றி இருக்கிறான்.  நான் லீவு முடிந்து மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் எல்லாமே தலைகீழ் ஆகி இருந்தது. இருப்பதிலேயே மொக்கை டிபார்ட்மென்ட்க்கு என்னை ட்ரான்ஸ்பர் செய்து இருந்தனர். தினம் வருகிற செக்கை என்ட்ரி போட்டு, பாங்க் சலான் பில் செய்து கேஷியரிடம் கொடுக்க வேண்டும். பிறகு பணம் வராத கஸ்டமருக்கு ஏற்கனவே இருக்கும் ரெடிமேட் கடிதத்தை பில் நம்பர் போட்டு தபாலில் அனுப்ப வேண்டும். சிலருக்கு போன் செய்து பேமெண்ட் கேட்டு நச்சரித்து துரத்த வேண்டும். 

நாயக் சார் கிளம்பி விட்டார். புதிதாக சேர்ந்த அக்கௌன்ட்ஸ் தலைவர் ஸ்வாமிநாதன் சாரை (ரொம்ப சாது, பட்டை பட்டையாய் விபூதி, ரொம்ப சாத்வீகம், ஒரு நாற்பது வயது இருக்கும்) போய் பார்த்தேன். அவருக்கு எல்லாமே தெரிந்து இருந்தது. அவர் சொன்னார் "பாலா இப்போது நீ பைனான்ஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமாவும் முடித்து விட்டாய், கம்பெனி பிக்சட் டெபாசிட் வேலையை உன்னிடம் கொடுக்க போகிறேன். அவற்றை எல்லாம் கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். அதற்கு நீ தான் இன்சார்ஜ். உன் வேலை மூலம் தான் நீ இழந்தவற்றை பெற முடியும், நான் இருக்கேன் பயப்படாதே" என்றார். சற்று  நிம்மதியாக இருந்தது (சரி, நம்ம ஆளு ஒருத்தர் இருக்கார் 
என்று ). பிறகு நானே சொன்னேன் "சார் என்னிடம் இப்போது நிறைய நேரம் இருக்கிறது, நம்ம கம்பெனி சின்ன சின்ன கவொர்ன்மெண்ட் கிளினிக்குக்கு மருந்து சப்ளை செய்து வர வேண்டிய பாக்கி சுமார் எட்டு லட்சத்தை தாண்டி இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால் நான் அவற்றை நேரில் சென்று வசூல் செய்கிறேன், இப்போது அதனை ஒரு ஏஜென்ட் ஒருவர் அரையும் குறையுமாக செய்து நல்ல கமிஷன் வாங்குகிறார், அதை மிச்சம் செய்யலாம்"  என்றேன். அவரும் 'சரி' என்றார்.

சுமார் மூன்றே மாதத்தில் என்னாலேயே நம்ப முடியாத அளவு ஐந்து லட்சம் வரை வசூல் செய்து விட்டேன். போன இடத்தில் எல்லாம் யாரும் வந்து கேட்கவில்லை, இதோ நீங்கள் வந்து இருக்கிறீர்கள், இருந்து அந்த செக்கை வாங்கிக் கொண்டு போங்கள் என்று சொல்லி சில இடங்களில் டீ வேறு கொடுத்து அனுப்பினர்.  ஜெ எம் டி ரூமில் ஜி எம் பிரபு சாரும் ஸ்வாமிநாதனும் இருந்தனர். என்னை உள்ளே அழைத்தார்கள்.  ஜி எம் பிரபு சார் "வெல் டன் மை பாய், அன்று நடந்ததை மனதில் வைத்துக் கொள்ளாதே, உனக்கு ஸ்பெஷல் இன்கிரிமெண்ட் கிடைக்க இருக்கிறது என்று சொல்லத் தான் கூப்பிட்டேன். யாரிடமும் சொல்லி விடாதே"  என்று கண்ணடித்து சிரித்தார். என்னை அறியாமல் என் பின்னால் யார் இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்தேன். 'அப்பாடா நான் இழந்ததை பெற்று விட்டேன்' என்று மிகவும் பெருமையுடன் வெளியே வந்தேன். பிரபாகர், ஹரி, வைத்தி, வர்ஷா எல்லோரும் ஏற்கனவே தெரிந்தது போல என்னைச் சுற்றி நின்று தோளில் தட்டிக் கொடுத்து பார்ட்டி கேட்டனர். மிகவும் மகிழ்ந்து போனேன். 

நான் தங்கி இருந்த ரூமுக்கு எதிரில் ராமநாதன் மற்றும் அழகுராஜா என்று இரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் குடியிருந்தனர். நாங்கள் முதல் சந்திப்பிலேயே நல்ல நண்பர்கள் ஆனோம். அவர்களின் சிநேகம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ராஜா அடுத்த மாதம் மஸ்கட் போகப் போகிறேன் என்றார். என்னையும் ஒரு பாஸ்போர்ட் எடுக்கச் சொன்னார். பிறகு தான் தெரிந்தது அடுத்து ராமநாதன் சாரும் கிளம்புகிறார் என்று. எனது புதிய பயோடேட்டா (ஒரு டிகிரி, ஐந்து டிப்ளமா படிப்பு, சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், வாலிட் பாஸ்போர்ட்  என்று அதைப் படிக்கும் போது எனக்கே ஒரு கிக்காக இருந்தது). என்னுடைய பாஸ்போர்ட் காபி மற்றும் பயோடேட்டா அவரிடம் கொடுத்து அனுப்பினேன். (அந்த நண்பர் ராமநாதனை வெகு அண்மையில் முகநூல் மூலம் தொடர்பில் கொண்டு மகிழ்ந்தேன். இப்போது அவர் துபாயில் 'சோனா ராம்'. ஒரு எப் எம் ரேடியோவின் தலைவர், மற்றும் ஒரு பெரிய செயின் ரெஸ்டாரண்ட் ஓனர்).

என் ரூம் மேட் சேகர் எனக்காக வீணை கிளாஸ் சேர்ந்து (வீணை ஜுரம் வந்தது போல போர்த்திப் படுத்து கிடக்கும் - ஒரு நாள் கூட அவன் வாசித்து நான் பார்க்கவில்லை). என்னுடன் சில நாள் கிளாஸ் வருவான். திடீர் என்று எனக்கு சென்னை மாற்றல் ஆகி விட்டது என்று சொல்லி திருவல்லிக்கேணி சேகர் (இன்னொரு சேகரா)  என்று ஒருவரை எனது ரூம் மேட் ஆக்கி அறிமுகம் செய்தான். இப்படி ஒருவர் ஒருவராக கிளம்பிடும் போது நான் தான் அவர்களுக்கு 'சென்ட் ஆப்' கவிதை எழுதி வாசிப்பேன். 

எனக்கு இன்டெர்வியூ எதுவுமே இல்லாமல் விசா, ஜாப் ஆர்டர் (அக்கௌன்டன்ட் கம் அட்மின் மேனேஜர் போஸ்ட்) வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்தது. இப்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம் பிளஸ் ஓ. டி, இருக்க குவாட்டர்ஸ், இலவச சாப்பாடு  வேறு உண்டு என்று ராமநாதன் போனில் சொன்னார். இப்போது மும்பையை விட்டு விட்டு மஸ்கட் கிளம்ப வேண்டும். என்னை FDC ல் ரிலீவ் செய்வார்களா? இது நல்ல வேலையா? இப்போது தான் இங்கே எல்லாம் சரியாகி விட்டதே. அப்பா இதற்கு ஒத்துக்கொள்ளுவாரா ? 

பல கேள்விகள் மனதுக்குள். எல்லாவற்றிற்கும் விடை கிடைக்காமலா போகும்? "நல்ல காலம் பிறந்தது" என்று சொன்னான் அத்தை பையன் சேகர். அத்திம்பேரும் 'நல்ல சான்ஸ். போய் விட்டு வா எல்லாம் நல்லபடி நடக்கும்' என்றார். எனது இடத்தில் சாயின் தம்பி திவாகர் (என்னுடைய குட்டி சித்தப்பா) கோவையில் இருந்து வந்தான். என்னுடைய 'சென்ட் ஆப்' கவிதை அவன் தான் எழுதப் போகிறான் என்பது இறைவன் ஏற்பாடு. 

ஸ்வாமிநாதன் சைன் போட்டு ஜி எம் பிரபு சாரிடம் அனுப்ப எனது ராஜினாமா ஏற்கப்பட்டு எனக்கு செட்டில்மென்ட் ஏற்பாடு ஆனது. நண்பர்கள் நிறைய கிப்ட் கொடுத்து ஆபிசில் ஒரு சின்ன 'சென்ட் ஆப்' ஏற்பாடு செய்தனர். ஜெ எம் டி, மற்றும் ஜி எம் பிரபு சார் இருவரின் ஆசி பெற்றேன். பிரபு சார் கேட்டார் "ஏதோ என்னுடைய சீட்டு கேட்டாய், வேறு ஊரில் கிடைத்து விட்டதா?" என்று என்னை கிண்டல் செய்து கண்ணடித்தார். அது அவர் ஸ்டைல்.

நடுவில் மஸ்கட் கிளம்பும் முன் பாம்பே நண்பர்கள் சிலர் வீட்டுக்கு போய் அவர்களின் வாழ்த்து பெற்றேன். அப்போது  நான் பாம்பேவுக்கு நிரந்தர டாட்டா காட்டப்போவது தெரியவில்லை. அப்பா அம்மா இருவரும் சென்னையில் இருந்து பிளைட் பிடித்து பாம்பே வந்தனர் என்னை வழி அனுப்ப. சில பல பொடிகள், விபூதி, சாமி படம், சட்டை பாண்ட், புது உள்ளாடைகள், என்று வாங்கி பாக்கிங் செய்யும் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இனி கிளம்ப வேண்டியது தான் பாக்கி. டிக்கெட் கூட அங்கிருந்து வந்து விட்டது. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment