Saturday, July 10, 2021

நீங்கா நினைவலைகள் - 16

 நீங்கா நினைவலைகள் - 16

- பாலசாண்டில்யன் 

முதலில் வேலை பார்த்த இடம் மத்திய அரசு ஆபீஸ். அங்கே எல்லாமே ஒரே மாதிரி ரொட்டீன் வேலை. எல்லோருமே சாய்குமார், சந்தானம், வெங்கட்ராமன், சேஷாத்திரி என்று  தமிழ்க்கார்கள். அடுத்த வேலை மார்வாடி நிறுவனம். அங்கே ஊழியர்கள் எல்லாம் பிஹாரி அல்லது உபி காரர்கள், அதற்கு அடுத்த ஒர்லி தலால் கம்பெனி ஒரு குஜராத்தி நிறுவனம். அங்கே சில தமிழர்கள், மலையாளிகள், மராத்தி மற்றும் குஜராத்தி மக்கள் இருந்தனர். இங்கே இந்த மருந்துக் கம்பெனியில் (1936 ல்  தொடங்கிய நிறுவனம் - சந்தாவார்கர் அவர்களால் தொடங்கப்பட்டது).  மராத்திக்காரர்கள், குஜராத்தி, கொங்கணி பேசுகிறவர்கள், தவிர பாலக்காட்டு தமிழ் பேசுபவர்கள், ஏழெட்டு தமிழ் பேசும் நண்பர்கள் இருந்தனர்.

ஜிஎம் பிரபு சாரின் செகரெட்ரி ஹரிஹரன், ஜெ எம் டி யின் செகரெட்ரி பிரபாகர், எம் டி யின் செகரெட்ரி வர்ஷா மற்றும் டோராத்தி,  பர்ஸானல் மேனேஜரின் செகரெட்ரி எலிசபத். அவர்கள் மத்தியில் தான் எனது சீட்டு. அதற்கு காரணம் இருந்தது. எனது மூன்று மாத ப்ரோபேஷன் முடிந்த பிறகு என்னை ஜெ எம் டி (எம் டியின் தம்பி மோகன் சந்தாவார்கர்) அவர்களின் தனிப்பிரிவு (விற்பனை பிரிவு) செயலாளர் ஆக்கினார். எனக்கு நேரடி அதிகாரி என்றால் அது சீப் அக்கௌன்டன்ட் நாயக் சார் மற்றும் ஜெ எம் டி தான். பின்னாளில் நாயக் சார் வெளிநாடு வேலை கிடைத்து கிளம்பும் போது எனது மேலதிகாரி நம்ம ஊர் ஸ்வாமிநாதன் (அவரும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்). அங்கே கஸ்பேகர், நவ்ரே, குல்கர்னி என்று மூன்று சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இருந்தனர். எதிரில் பர்சேஸ் டிபார்ட்மென்ட்டில் ஒரு சுப்பு எனக்கு நல்ல நண்பனாக ஆனார்.

எனக்கு எல்லாமே புதுசு தான். காரணம், கேசுவல் லீவ், மெடிக்கல் லீவ், எர்ன் லீவ், போனஸ், எக்ஸ்க்ரேஷியா, மெடிக்கல் அலவன்ஸ், எல் டி ஏ எனும் லீவ் ட்ராவல் அலவன்ஸ் எல்லாமே உண்டு. தவிர, கம்பெனி தயாரிக்கும் மருந்துகள் சில இலவசமாக (மாதம் ரூபாய் 200 க்கு ) பெற்றுக் கொள்ள தனி கார்டு உண்டு. போனில் ஆர்டர் கொடுத்தால், வெளியே போகும் கேட்டில் பேக் செய்து வைத்திருப்பர். அவர்களின் தயாரிப்பு என்று பார்த்தால் எலெக்ட்ரால் (ஓரல் டீஹைட்ரேஷன் பொடி), கண்ணுக்கு ட்ராப்ஸ், இருமல் சிரப், ப்ரோ சோயால் எனும் குழந்தை சாப்பாடு பவுடர், எநேர்சால் என்று பல பார்முலேஷன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக அது இருந்தது. ஓரிரு முறை பாக்டரிக்குள் அந்த வெள்ளை கோட் வெள்ளை தொப்பி எல்லாம் போட்டுக் கொண்டு பார்த்திருக்கிறேன். கோடௌனில் இரண்டு தமிழ் பாய்ஸ் உண்டு. சில நேரம் அங்கே சென்று அரட்டை அடிப்பது உண்டு. 

தவிர, ரோஹா எனும் (மஹாராஷ்டிராவில் உள்ளது) இடத்தில் இருந்த பல்க் ட்ரக் - இந்திய விற்பனைக்கு என்னை தேர்வு செய்தனர். அந்த பாக்டரியில் ஜுரம் தலைவலிக்கு பயன்படுத்தும் பாராசிட்டமால், தூக்க மாத்திரைக்கு பயன்படுத்தும் டயசபம், இருமல் சளி மாத்திரைகளில் (பாக்ட்ரிம் டி எஸ் போன்ற) பயன்படுத்தும் சல்பா மெதோக்சஜால் மற்றும் ட்ரைமெதோபேரிம், தீ காயங்களுக்கான ஆயிண்ட்மென்டில் பயன்படுத்தும் சில்வர் சல்பா டயஸின் (அப்போதே அது பயங்கர விலை - ஒரு கிலோ சுமார் 18000/-) இவற்றை எல்லாம் (சென்னையில் இருந்த டாப்லெட்ஸ் நிறுவனம், அமெரிக்கன் ரெமெடிஸ் போன்ற பல நிறுவனங்களுக்கு) நேரடி விற்பனை எல்லாமே போனில் முடிக்கும் எளிதான வேலை தான். மாதாமாதம் அல்லது எப்போதெல்லாம் ஜெ எம் டி கேட்கிறாரோ அப்போது அவருக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். தவிர, பாக்டரியுடன் பேசி ஆர்டரை சீக்கிரம் முடிக்கச் சொல்லி முடுக்கி விட வேண்டும். முக்கால்வாசி நிறுவனம் அட்வான்ஸ் பணம் கொடுத்து விட்டுக் காத்திருப்பார்கள். இது தவிர ரோஹா பிளான்டின் அக்கௌன்ட்ஸ் கூட நான் பார்க்க வேண்டும். என்னுடைய வேலைப்பளு அதிகமானால் வைத்தி உதவுவார். எனக்கு வேலை மிகவும் பிடித்துப் போனது. அப்போது எனக்கு வயது 23 இருக்கும்.

அந்த டிப்ளமோ இன் பிசினெஸ் மேனேஜ்மென்ட் படிப்பை வகுப்பிலேயே முதலாவதாக வந்து எனக்கு காஷ் அவார்டு கூட கொடுத்தார்கள். நாயக் சார் சொல்லி பாம்பே யூனிவர்சிட்டி வழங்கும் டிப்ளமோ இன் பைனான்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்தேன் (அது தபால் வழிக் கல்வி). அதனால் எங்கும் நான் அலைய வேண்டாம். ஆனால் எனக்கு சில பாடங்கள் புரியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது. கஸ்பேகர் அல்லது நவ்ரே சார் இருவரும் எனக்கு சொல்லித்தருவர். 

அது மட்டுமா? அந்த நிறுவனத்தில் எல்லோருமே கிரிக்கெட் பைத்தியம். ஒவ்வொருவரும் நாளைக்கு எனக்கு தலைவலி ஜுரம் என்று லீவு போட்டு மாட்ச் பார்ப்பார்கள். என் ரூமில் டிவி கிடையாது. ஆனால், வேறு ஒரு விஷயம் நான் பிறரோடு சேர்ந்து செய்தேன். யார் ஜெயிப்பார்கள் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பெட் கட்டுவர். ரொம்ப கிடையாது பத்து ரூபாய் இருபது ரூபாய் போலத்தான். நான் ஒருவரிடம் தோற்கும் என்று கட்டுவேன். வேறு இருவரிடம் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுவேன். எப்படியாவது பணம் வந்து விடும். அல்லது ரொம்ப குறைவாக போய் விடும். தீபாவளிக்கு சிலர் வெள்ளி பேலா, சின்ன வெள்ளி டம்ளர், ட்ரை பிரூட்ஸ், காஜூ கத்திலி என்று கொண்டு வந்து கொடுப்பர். இது அல்மோஸ்ட் எல்லா ஆஃபீசருக்கும் தருவார்கள். நான் வேண்டாம் என்றால் மேஜை மீது வைத்து விட்டு ஹாப்பி தீபாவளி ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி நகர்ந்து விடுவார் அந்த கிளையண்ட்.. இது அங்கே ரொம்ப சகஜமான ஒரு விஷயம்.  

நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட் டயானா (ஆமாம் அவள் ராணி டயானா போல அழகு தான் - திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் போலவே இருக்க மாட்டாள்). அவளின் வேலையே ஒரு பதினோரு மணிக்கு அங்கே இருந்த காமன் ஆடியோ சிஸ்டம் மூலம் வாத்திய இசை போட வேண்டும். பாட்டு கேட்டுக் கொண்டே வேலை பார்த்தால் மக்களின் உற்பத்தித்திறன் கூடும் என்று நிறுவனம் நம்பியது. அதே போல யாருக்கு போன் வந்தாலும், அவர்கள் சீட்டில் இல்லை என்றால் அவர்களின் பெயர் சொல்லி அனௌன்ஸ் பண்ணுவார் டயானா. இதெல்லாமே எனக்கு மிகவும் புதிது. மிகவும் பிடித்தது. நான் இன்டெர்வியூ சென்ற போதும் டயானா தான் என்னை மிகவும் உபசரித்து ஆசுவாசப்படுத்தினார். 

பாட்டு கிளாசில் லட்சுமி கணபதி மேடம் மிக வேகமாக கீர்த்தனை வந்து விட்டார் (எங்கள் பாட்ச்சில் நான்கு பேர் தான் - ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள்). கீர்த்தனத்திற்கு முன்பு அந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணம் சொல்லிக் கொடுப்பார். பிறகு சொந்தமாக ஆலாபனை செய்ய வேண்டும். எனக்கு சின்ன வயதில் கேட்டது, அத்திம்பேர் பாடியது, தவிர ஸ்பூலில் மகாராஜபுரம் பாடியது என்று எல்லாமே ஒலிக்கும். 'ஹூம்' பரவாயில்லேயே என்று சீக்கிரம் ஓகே வாங்கி விடுவேன். சாகித்யம் முடிந்த பிறகு சொந்த கற்பனையில் 'நிரவல் ஸ்வரம்' பாட வேண்டும். நான் அந்த நாள் மட்டும் ரயிலில் வரும் போதெல்லாம் மனதுக்குள் முனகி முனகி பாடிச் சில ஸ்வரங்களை மனப்பாடம் செய்து வைப்பேன். இருந்தாலும், டீச்சர் மிக லாவகமாக எனக்கு சொல்லிக் கொடுத்து திருத்துவார். எனக்கு இருந்த சவாலே மடியில் தாளம் போட்டுக் கொண்டு பாடுவது. நிச்சயம் தாளத்தோடு பாடினாலும், மடியில் தாளம் தப்பாக போட்டு திரும்பப் பாடும்படி ஆகி விடும். டீச்சர் என்னைப் பார்த்து ரொம்ப களைப்பாக இருக்கே. கவலைப்படாதே. நிச்சயம் நன்றாக பாடுவாய் என்று உற்சாகப்படுத்துவார்.

ஷண்முகானந்தாவில் வருடம் தோறும் பாட்டுப்போட்டி நடக்கும். பாட்டு படிக்கிற எங்களைப் போன்றவர்களுக்கு அதனை நேரில் பார்வையிட அனுமதி உண்டு.  அதில் வெல்லுபவர்களுக்கு ஒரு தம்பூரா பரிசாக கிடைக்கும். அது ஒரு பெரிய கெளரவம் தான். ஒரு வருடம் செம்பூரில் வந்து பாம்பே ஜெயஸ்ரீ என்றார்கள். அடுத்த வருடம் அனுராதா ஸ்ரீராம் அவர்களின் கணவர் ஸ்ரீராம் பரசுராம் வென்றார். அடுத்த வருடம் ஏற்கனவே எனக்கு நல்ல தோழியாக இருந்த கல்யாணி சங்கர் வென்றார்.  (அவர் தான் இசை பற்றிய பல சந்தேகங்களுக்கு எனக்கு விளக்கம் தருவார். ஓரிரு முறை அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். அவர் அம்மா டிபன் காபி கொடுத்து உபசரிப்பார். கல்யாணியின் அக்கா இருவர் அங்கே ஏற்கனவே மாதுங்கா சிஸ்டேர்ஸ் என்று ரொம்ப பிரபலம்) 

அந்த போட்டிகள், கச்சேரிகள் என்று எல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்றால் அந்த நினைவுகள் இன்றும் சுகமானவை.பசுமையானவை. நான்  ஏற்கனவே இருக்கும் மெட்டுக்கு சில பாடல்கள் எழுதி அவற்றை டீச்சருக்கு பாடிக் காட்டுவேன். அத்தை வீட்டுக்கு போனால் அவருக்கும் பாடிக் காட்டுவேன்.

மஹாதேவன் அண்ணா என்னை மாதுங்கா தமிழ் சங்கத்திற்கு எழுத்தாளர் சிவசங்கரி வருகிறார் என்று ஒரு முறை கூப்பிட்டுப் போனார். அந்த கூட்டம் முடியும் வரை அமர்ந்து இருந்து நான் சிவசங்கரி அம்மாவைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை பரிசாக அளித்தேன். அவர் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் 'பாலா உனக்கு பெரிய எதிர்காலம் இந்த துறையில் காத்திருக்கிறது. ஆல் தி பெஸ்ட்' என்று எழுதிக் கொடுத்து கையொப்பம் இட்டார். அவருக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு. (அது மட்டுமா அவர் வாக்கு ஞானி பாரதி வாக்கு போல) அதனை எடுத்துக் கொண்டு வந்து அத்தை, சேகர், அவன் மனைவி (எனது அக்கா) அனுவிடம் காட்டி மகிழ்ந்தேன். பிறகு அம்மாவிற்கு அது பற்றி கடிதம் எழுதி தெரிவித்தேன். 

அதற்கு பிறகு க பா சு மணியன், பாம்பே என்ற பெயரில் துணுக்குகள், ஜோக்குகள், சிறு கவிதைகள் என்று பத்திரிகை அலுவகங்களுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். சில படைப்புகள் பிரசுரம் ஆயின. ஆவலாக சென்று ஹோட்டல் ஆனந்த பவன் வாசலில் இருந்த தமிழ் கடையில் சென்று பத்திரிகைகளை புரட்டிப் பார்ப்பேன் என்னுடைய கவிதை வந்திருக்கிறதா என்று...! மஹாதேவன் மற்றும் அவர் மனைவி ரேவதி மன்னியும் எனது வாசகர்கள். அவர்கள் இருவரும் நல்ல ஆதர்ச தம்பதியர்கள். ரேவதி மன்னி சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆஃபீசர். மஹாதேவன் தனியார் துறை அதிகாரி. இன்றும் அவர்கள் (தானேவில் பேரன் பேத்தி என்று சந்தோஷமாக உள்ளனர்) தொடர்பில் உள்ளனர்.

மழை பெய்தால் நிச்சயம் தவித்துப் போவோம். சில சமயம் குடை, ரெயின் கோட் எல்லாம் போதாது. தெருவெல்லாம் வெள்ளம் வந்து சில மணி நேரங்களில் வடிந்து விடும். பேப்பர் விளம்பரங்கள் மழை அடுத்த வாரம் வரும் என்பதை சொல்லி 'உங்கள் கார் டயரை மாற்றுங்கள்' என்பர். சில நேரம் எலக்ட்ரிக் ரயில்கள் ஓடாது. 1984 ஆம் ஆண்டு ஒரு நாள் நான் பாந்திரா ஸ்டேஷன் வரை வந்து விட்டேன். பிரதமர் இந்திரா அம்மையார் இறந்து விட்டார் என்று ஒரே அமர்க்களம். வண்டிகள் அப்படியே நின்று விட்டன. நான் பாந்திராவில் இருந்து மாஹிம் வழியாக சயான் வரை மணிக்கணக்கில் நடந்தே வீடு வந்து சேர்ந்தது இன்றும் எனக்கு நினைவில் உண்டு. 

வேறு சில முக்கிய விஷயங்கள் பகிர்வதற்கு இருக்கிறது எனது பாம்பே வாழ்க்கையில். நிச்சயம் அடுத்த பகுதியில் அது முடியும் என்றே கருதுகிறேன்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment